செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கைது செய்து இன்று 100வது நாள்! ஜாமீன் மறுப்பு! குடும்பத்தினர் கலக்கம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி இன்றுடன் 100 நாள் ஆகியுள்ள நிலையில் அவருடைய குடும்பத்தினர் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். அவரை ஜாமீனில் எடுக்க அடுக்க கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி அல்லி விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும்,
சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை என்றும் வாதிடப்பட்டது.
வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் நபர்களில் ஒருவர் கூட சாட்சியாக சேர்க்கப்படவில்லை எனவும், மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கவில்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
பாஜகவில் ஏன் இணையக் கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத் துறையிடம் உள்ள நிலையில் எப்படி சாட்சிகளை கலைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அமலாக்கத் துறை விசாரணையின் போது, பாஜகவில் ஏன் இணையக் கூடாது என அமலாக்கத் துறை கேட்டதாக கூறப்படும் வாதத்தை மறுத்த அமலாக்கத் துறை தரப்பு, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி, அமலாக்கத் துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது எனவும், செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பதால், செல்வாக்கான அவர், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இந்த மனு மீது நீதிபதி அல்லி நேற்று தீர்ப்பளித்தார். அமலாக்கத் துறை தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவருடைய நீதிமன்றக் காவல் கடந்த 15 ஆம் தேதி அன்று முடிவடைந்த நிலையில் வரும் 29ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது 6ஆவது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. அவருடைய ஜாமீன் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் மீண்டும் தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. செந்தில் பாலாஜி கைதாகி 100 நாட்கள் ஆன நிலையில் அவருடைய குடும்பத்தினர் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு அரை மணி நேரம் நிற்க கூட முடியவில்லை என்கிறார். சிறையில் அவருடைய உடல்நலத்தை எண்ணி கவலைப்பட்ட வாறு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications