அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி
சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையின் சென்னை அலுவலக மண்டலம் முடக்கியுள்ளது.
தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதியில் உள்ள அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த 2002-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை அடுத்து அமலாக்கத்துறை வசம் சென்றது. விசாரணை கைமாறிய உடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிரடி காட்டியது.
அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் உட்பட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, சொத்துக்களை முடக்கியது. இந்த விவகாரத்தால் டென்ஷன் ஆன அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடர கூடாது என்று கேட்டிருந்தார். வழக்கு விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அமர்வுக்கு முன்பு வந்தது.
அமலாக்தக்துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகியிருந்தார்."வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆதலால் வழக்கை ரத்து செய்ய கூடாது. மாறாக அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தனர். மட்டுமல்லாது விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications