சட்டவிரோத பணபரிவர்த்தனையில் மையப்புள்ளியே செந்தில் பாலாஜிதான்.. சிக்கிய ஆதாரங்கள்.. ED தகவல்
சென்னை: சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் மையப்புள்ளியாக அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார் என அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011- 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கன்டக்டர், தொழில்நுட்பப் பணியாளர்கள், டிராப்ட்ஸ்மேன் போன்ற பணியிடங்களுக்கு பலரிடம் பணம் பெற்றதாக கணேசன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் சிபிசிஐடி போலீஸார் 3 குற்ற வழக்குகளை பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள நிலையில் அவர் மீது 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களை அமலாக்கத் துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் நேரில் ஆஜரான போதே வழங்கப்பட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில் இருப்பதாவது: போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் மூலம் பலரிடம் பெரும்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக கிடைத்த செந்தில் பாலாஜி நேரடியாகவே பெற்றுள்ளார். அந்த பணத்தை தனது வங்கிக் கணக்கிலும் தனது மனைவி மேகலா, தம்பி அசோக்குமார், உறவினர்கள் சிலரது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார்.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக உதவியாளர்களால் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்களும் கிடைத்துள்ளன. செந்தில் பாலாஜி திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபட்டதற்கான அனைத்து ஆவணங்களும் கிடைத்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றத்தில் மையப்புள்ளியாக செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார்.

இந்த முறைகேட்டில் தனக்கு தொடர்பில்லை என செந்தில் பாலாஜி கூறினாலும் அவரது அதிகாரத்தின் கீழ்தான் இந்த முறைகேட்டுக்கான சதி நடந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மொத்தம் எத்தனை பணியிடங்கள், ஒவ்வொரு பணியிடத்திற்கும் எவ்வளவு பணம் நிர்ணயிக்கப்பட்டது, யாரிடம் எவ்வளவு பணம் வாங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களும் பென் டிரைவ்களும் கிடைத்துள்ளன.
அந்த பணத்தை செந்தில் பாலாஜியும் அவரது தம்பியும் சேர்ந்து வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான டிஜிட்டல் டிரான்ஸாக்ஷன் ஆதாரங்களும் உள்ளன. செந்தில் பாலாஜியின் வருமான வரி கணக்கை ஒப்பிட்டு பார்க்கும் போது முரண்பாடுகள் உள்ளன என அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications