6 மணி நேர விசாரணை.. 4 நாள் டைம் கொடுத்த ED.. முக்கிய ஆதாரத்தை கொடுக்கும் டாஸ்மாக் நிர்வாகிகள்!
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா மற்றும் டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோரிடம் அமலாக்கத்துறை 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையை தொடர்ந்து, சென்னை உட்பட 8 மாவட்டங்களில் டாஸ்மாக் கிடங்கில் இருந்து சப்ளை செய்யப்பட்ட மதுபானங்களின் விவரங்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு சோதனை நடத்தினர். டாஸ்மாக் மேலான் இயக்குநர் விசாசன் ஐஏஎஸ், எஸ்என்ஜே மதுபான நிறுவன அலுவலகம், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் தேவக்குமார், தொழிலதிபர் ரத்தீஷ் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், மதுபான கொள்முதல், பார் உரிமம், மதுபானங்கள் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர், பாட்டிலிங் நிறுவனம் உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே இந்த அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் ஆஜராக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதேபோல் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை.
இதன்பின் டாஸ்மாக் நிறுவன மேலாளர் சங்கீதா மற்றும் துணை மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் இருவரிடமும் தனித்தனியாக சுமார் 6 மணி நேரத்திற்கு அதிகமாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வாக்குமூலமாக மட்டுமல்லாமல், எழுத்துப்பூர்வமாகவும் சில தகவல் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை உட்பட 8 மாவட்டங்களில் டாஸ்மாக் கிடங்கில் இருந்து சப்ளை செய்யப்பட்ட மதுபானங்களின் விவரங்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் நிறுவன மேலாளர் சங்கீதா சில முக்கிய ஆவணங்களையும் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரத்தீஷ் ஆகியோரையும் பிடிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications