அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் ரெய்டு! ரூ. 8 கோடி சொத்துகள் ஏற்கனவே முடக்கம்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கவுத சிகமாணி எம்பிக்கு சொந்தமான ரூ. 8 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது.
தமிழ்நாடு அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட செம்மண் குவாரி வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம், சென்னை உள்ளிட்ட வீடுகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. துணை ராணுவப் படை பாதுகாப்புடன் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் அமைச்சர் பொன்முடியின் மகனும் திமுக எம்பியுமான கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்னர் கவுதம சிகாமணி எம்பிக்கு சொந்தமான ரூ8 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
ரூ8 கோடி சொத்துகள் முடக்கம் ஏன்?: ஐக்கிய அரபு அமீரகத்தில் கவுதம சிகாமணி எம்பி முதலீடு செய்திருந்தார். ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாட்டில் முதலீடு செய்து கவுதம சிகாமணி எம்பி வருவாய் ஈட்டினார் என்பதுஅமலாக்கத்துறை வழக்கு. இந்த வருவாயில் ரூ7 கோடியை கணக்கில் காட்டாமல் மறைத்தார் கவுதம சிகாமணி எம்பி என்பதும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. இதனடிப்படையில் அவருக்கு சொந்தமான அசையா சொத்துகள், வணிக வளாகங்கள், வங்கி கணக்கு பணம் உட்பட ரூ8 கோடியே 60 லட்சம் மதிப்பிலான சொத்துகளை 3 ஆண்டுகளுக்கு முன் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்திருந்தது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications