இது பழிவாங்கும் நடவடிக்கையா? வேடிக்கையால்ல இருக்கு.. பாஜக நாராயணன் திருப்பதி விமர்சனம்
சென்னை: பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை என்றால் அதை வரவேற்க வேண்டும். அதை விடுத்து பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவது வேடிக்கையாக இருப்பதாக தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வருகின்றன. அந்த வகையில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் திமுகவும் பங்கெடுக்கிறது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மீது குற்றச்சாட்டு இருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை திடீர் ரெய்டை மேற்கொண்டிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீடுகள் என 5 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. மட்டுமல்லாது இவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
எந்த வழக்கின் கீழ் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர் என்பது தெரியாமல் இருந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்படுவது தெரிய வந்தது. 11 ஆண்டுகள் கழித்து ரெய்டு நடத்தப்படுவது பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.க.வுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. அதன் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட பொய் வழக்குதான் இந்த வழக்கு. எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. ஆளுநருடன் தற்போது அமலாக்கத்துறையும் இணைந்துள்ளதால் வருகின்ற தேர்தல் எங்களுக்கு சுலபமாக இருக்கும்.
தன் மீதான வழக்குகளை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார். இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். எந்த சவாலையும் சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. காவிரி மேகதாது அணை விவகாரத்தில், கருணாநிதி எடுத்த முடிவில் நாங்களும் உறுதியாக உள்ளோம்" என்று கூறினார்.
இந்நிலையில் இந்த ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். அதாவது, "பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை என்றால் அதை வரவேற்க வேண்டும். அதை விடுத்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வது வேடிக்கை. ஊழலுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று ஆளுநர் சொன்னால் கோபப்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications