காலையிலேயே அலற விடும் அமலாக்கத்துறை.. சென்னையில் மருத்துவர், தொழிலதிபர் வீடுகளில் ரெய்டு!
சென்னை: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அதேபோல சென்னை அடையாறில் உள்ள டாக்டர் இந்திரா என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணியன் என்பவர் வீடு உள்பட மேலும் 2 பகுதிகளில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையின் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டு பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் சென்னையில் தொழிலதிபருக்கு தொடர்புடைய இடங்கள் உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications