டாஸ்மாக் MD விசாகனை உலுக்கி எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.. 5 மணி நேரம் கேப் விடாமல் விசாரணை!
சென்னை: சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு புகாரில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனை அழைத்துச் சென்று 5 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

இந்தச் சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
இந்தச் சோதனையின்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் வீட்டின் அருகே கிழிந்த நிலையில் கிடந்த வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட் நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அதேபோல், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் மனைவி, மகனிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, விசாகனை அமலாக்கத் துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை விசாகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கத் துறை.
அங்கு ஐந்து மணி நேரமாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறையினர், விசாகனை அவர்களது காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், தொடர்ந்து அங்கு வைத்து விசாரிக்கப்படுமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், அவரது வீட்டில் தொடர்ந்து 15 மணி நேரமாக சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விகாகன் ஐஏஎஸ்ஸிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications