சென்னையில் அதிகாலையிலேயே ரெய்டில் இறங்கிய அமலாக்கத்துறை.. 5க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை
சென்னை: சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சௌகார்பேட்டை மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள தங்க நகை மொத்த வியாபாரி வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடந்து வருகிறது.
தமிழகத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையின் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் சென்னை அடையாறு பகுதியில் மருத்துவர் இந்திரா, மேற்கு மாம்பலத்தில் தொழிலதிபர் சுப்பிரமணியன், வேளச்சேரியில் தொழில் அதிபர் பிஷ்னோய் ஆகியோரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் 3 வாகனங்களில் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமகிருஷ்ணன் MARG லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் சென்னை சௌகார்பேட்டையில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்யும் மோகன்லால் காத்ரி என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தொழிலதிபர் மோகன்லால் காத்ரியின் புரசைவாக்கம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையானது வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications