எடப்பாடி பழனிசாமி உறவினர் ஈரோடு ராமலிங்கம் வீடு உட்பட 26 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்தின் சென்னை, பெங்களூர், ஈரோடு வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஈரோடு ராமலிங்கம். எடப்பாடி பழனிசாமி மகனின் சகலையின் தந்தைதான் ராமலிங்கம். தமிழ்நாட்டில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை செய்து வருகிறார். கர்நாடகாவில் ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வருமான வரி சோதனையில் ரூ152 கோடி சிக்கியிருந்தது.

இந்த வழக்கில்தான் ஏற்கனவே எடப்பாடியின் உறவினரான ராமலிங்கம் வீடுகளில் பல முறை வருமான வரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் மொத்தம் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் ஈரோடு ராமலிங்கத்தின் சென்னை, கோவை, ஈரோடு, பெங்களூர் வீடுகளிலும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில், கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவன அதிபர்களிடம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உறவினர்கள்தான் இவர்கள் எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல்லில் வாசவி நகைக்கடை உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வரிசையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோடு ராமலிங்கம் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இன்று 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications