நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்! போதைப்பொருள் வாங்கியதில் ஹவாலா பணப்பரிமாற்றம்?
சென்னை: போதைப் பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 28 ஆம் தேதி அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஸ்ரீகாந்த் ஆஜராகாத நிலையில், வரும் 11 ஆம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில், சில மாதங்களுக்கு முன்பு இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்களிடம் உயர் ரக போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, எங்கிருந்து அவர்களுக்கு போதைப்பொருள் கிடைத்தது? என்ற ரீதியில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அப்போது, போதைப்பொருளை வாங்கியதாக நடிகர் ஸ்ரீகாந்த், ஜவஹர், பயாஸ் அகமது ஆகியோரை சென்னை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்ததால், அவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இது ஒருபுறம் இருக்க, இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணிப்பர்வர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறையும் கடந்த ஆகஸ்ட் மாதம் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. மேலும், ஹவாலா பரிவர்த்தனை மூலம் போதைப்பொருள் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் அக்டோபர் 28 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதே போல, நடிகர் கிருஷ்ணா அக்டோபர் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் ஆஜரானார்.
காலை 10 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு கிருஷ்ணா பதில் அளித்துள்ளார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை. வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 28 ஆம் தேதி அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஸ்ரீகாந்த் ஆஜராகாத நிலையில், வரும் 11 ஆம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications