அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச்சென்ற அமலாக்கத்துறை.. 13 மணிநேர ரெய்டுக்கு பின் பரபர
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், அவர் விசாரணைக்காக அழைத்துச் சென்று இருக்கின்றனர்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராகவும், திமுகவின் மூத்த தலைவராகவும் இருப்பவர் பொன்முடி. இவரது மகன் கௌதம சிகாமணியும் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பியாக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, தொடர்புடைய சோதனை செய்யப்பட்டதைபோன்றே இவருக்கு தொடர்புடைய இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று துணை ராணுவ பாதுகாப்புடன்
விழுப்புரம், சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணியின் வீடு, மற்றும் அலுவலகங்கள், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை தொடங்கினர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகள் பொன்முடியின் இல்லத்துக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் தடயவியல் குழுவினர் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் ரூ.70 லட்சம் மதிப்பு பணம், வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
அவரது வீட்டில் இருந்த பீரோ சாவி இல்லாத நிலையில் மாற்று சாவி தயாரிப்பவர்களை அழைத்து வந்து சாவி செய்து அதில் சோதனையிட்டனர். இந்த நிலையில் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர்.
பொன்முடியை அவரது இல்லத்தில் வைத்தபடியே அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது சோதனை தொடர்பாக முழு விபரங்கள், கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த முழு தகவலும் கிடைத்ததை அடுத்து அவரை சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்குள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் அவரிடம் விசாரிக்க உள்ளனர்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அமைச்சர் பொன்முடியை அவரது சொந்த காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து செல்கிறார்கள். மற்றொரு காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறையினரும் சென்றனர்.












Click it and Unblock the Notifications