"ஓபிஎஸ் அருகில் அமர்வதை எடப்பாடியால் ஏற்க முடியவில்லை" விட்டு விளாசிய மா.சுப்பிரமணியன்!
சென்னை: தன் அருகே ஓ.பன்னீர் செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் வைக்கப்பட்டது. அதேபோல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையும் வைக்கப்பட்டது.
இந்த இரு அறிக்கைகளிலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தலைமையிலான அதிமுகவினர் இழைத்திருக்கிற குற்றங்கள், புகார்கள் ஆகியவற்றையெல்லாம் நேரடியாக சந்திக்க திராணியில்லாமல், சட்டசபையில் நேற்று மிகப்பெரிய கலவரத்தை அரங்கேற்றினார்கள்.

கூச்சலில் ஈடுபட்ட அதிமுக
கேள்வி நேரத்தின் போது மற்ற எந்த அலுவலும் அனுமதிக்க கூடாது என்ற நிலையில், வேண்டுமென்றே கேள்வி நேரத்தின் போது மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கினார்கள். சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்தும், அவருக்கு முன்பாகவும் முழக்கங்களை எழுப்பினர். அந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு எடுத்துக் கூறியும் கேட்காமல் கூச்சல், குழப்பமிட்டு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர். சட்டசபையின் செயல்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை
எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் ஓ பன்னீர் செல்வம் அமர்வதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் பெரிய புகார் பட்டியலை வாசித்துள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு என்பது விதிகளின்படி இல்லாத ஒன்று. சபாநாயகர் அப்பாவு குறித்து எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவினர் குறைகூறுவது வியப்பளிக்கிறது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் சபையை நடத்திய விதத்தால் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை
சட்டசபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை விடவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சபாநாயகர் அப்பாவுவை அதிமுகவினர் குறைகூறி இருப்பது வியப்பளிக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலட்சியமாக செயல்பட்டது அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

அலட்சியாக செயல்பட்ட இபிஎஸ்
ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது வெளியே வந்துள்ளது. அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில், உளவுத்துறை தகவல் தெரிவித்தும் சட்டம் - ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமல் இருந்தது. தீவிரமாக கவனித்திருந்தால், பிரச்சினையை திறம்பட சமாளித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் சட்டசபையில் கலவரம் செய்ய முயற்சித்து வெளியேறி இருக்கிறார் என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications