"பண்ருட்டி ராமசந்திரன் அரசியலுக்கு வந்தபோது, டவுசர் போட்டு பள்ளிக்கு சென்றவர் இபிஎஸ்" கோவை செல்வராஜ்
சென்னை: பண்ருட்டி ராமசந்திரன் அரசியலுக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி டவுசர் போட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்திருப்பார் என கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தனியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். நாளுக்குநாள் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது.
இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசி இருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கோவை செல்வராஜ் பேட்டி
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவர் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இரு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்தில் எந்த கோரிக்கைக்கு சென்றாரோ, அந்த கோரிக்கையை மறந்து கட்சியின் மூத்த தலைவரும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரனை மிகவும் தரமற்று பேசியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இபிஎஸ் தான் காரணம்
பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலுக்கு வரும்போது எடப்பாடி அரை டவுசர் அணிந்து பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருப்பார். எடப்பாடி பழனிசாமி தலைமை பண்பு இல்லாதவர். ஜெயலலிதாவால் நல்ல தலைவர் என பெயர் எடுத்தவரை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி வருகிறார். ஓபிஎஸ்-ஐ ஆதரிப்பவர்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பின் அதிமுக நான்காக பிரிந்துள்ளது. அதிமுக மக்கள் பிரச்சினைகளை எடுத்து வைக்காமல் உட்கட்சி சண்டையிட்டுக் கொண்டுள்ளதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்று குற்றம்சாட்டினார்.

கோடநாடு வழக்கு
தொடர்ந்து கோடநாடு வழக்கு தீர்ப்பில் குற்றவாளி யார் என்று தெரிய வரும்போது, இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். ஓபிஎஸ் தலைமையில் கட்சி நடைபெறும். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை இருக்கும் பழனிசாமி செய்த தவறுகள் பட்டியலிட்டு சொல்லப்படும். அதிமுக கொள்கைக்காகவோ, கட்சியை வளர்ப்பதற்காகவோ இபிஎஸ் வாழவில்லை. அவர் அதிமுகவை அழிப்பதற்கு என்றே ஒரு சூனியமாக வந்துள்ளார்.

மனிதநேயம் இல்லாதவர்
எடப்பாடி பழனிசாமி அனைவரும் அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் என்றாவது சிரித்த முகத்தோடு இருந்துள்ளாரா, அவர் சிரிப்பதை பார்த்தால் குழந்தைகள் தூங்காது. மனிதநேயம் இல்லாதவர். அரசியல் கட்சிக்குள் விமர்சனங்கள் வரும். அதையெல்லாம் சரிசெய்து முன்நகர வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படியில்லை என்று தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை தொடர்ந்து ரெய்டுக்கு செல்வதில் தவறில்லை. அவர்கள் தவறு செய்யாமல் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம். அதை விட்டுவிட்டு எஸ்பி வேலுமணி இல்லம் முன்பு அதிமுக தொண்டர்கள் அமர்வது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications