”சிறந்த நடிகரின் பட ரிலீஸ்-க்கு முதல்நாள்.. நாங்கள் செய்த உதவி” ரகசியம் பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு செய்த உதவி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை தியாகராயர் நகரில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தனியார் தொண்டு நிறுவனத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி நடிகர் விஜய்-ன் மெர்சல் படத்திற்கு உதவியது பற்றி பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த 2 மேட்டர்.. எடப்பாடியை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. ஈபிஎஸ் சிரிப்பை பார்க்கணுமே!
எடப்பாடி பழனிசாமி செய்த உதவி
இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஒரு சிறந்த நடிகர். பெரும் ரசிகர் கூட்டத்தினை வைத்திருப்பவர். அடுத்த நாள் படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்குச் சான்றிதழ் வாங்குவது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. மறுநாள் கண்டிப்பாகப் படம் வெளிவர வேண்டும்.
அனுமதி பெற்றுக் கொடுத்த இபிஎஸ்
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தான் இதற்குத் தீர்வு காண வேண்டும் என என்னை நாடினார்கள். அதற்குத் தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மத்திய அரசில் இருக்கும் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அதற்கு அனுமதி வாங்கி திரைக்குக் கொண்டு வருவதற்கான வேலையைச் செய்து கொடுத்தோம் என்று தெரிவித்தார்.
மெர்சல் சர்ச்சை
தேணாண்டாள் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. ஆனால் அந்தப் படம் மெஜிசியன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்தபோது, பாம்புகள் புறாக்கள் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது படக்குழு சார்பாக கிராஃபிக்ஸ் என்று விளக்க அளிக்கப்பட்டபோதும், பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
சோதனைகளை தகர்த்த மெர்சல்
சரியாக படம் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு விலங்குகள் நலவாரியத்தின் சான்றிதழ் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் திண்டாடியதாக கூறப்பட்டது. இருந்தும் அனைத்து சவால்களையும் தகர்த்து, மெர்சல் திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங்
எடப்பாடி பழனிசாமி பேசும் போது நடிகர் விஜய் பெயரையோ, தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை. உதவி கேட்டவர்களின் பெயரை சொல்லக் கூடாது என்றும், இனியும் சொல்லப் போவதுமில்லை என்று கூறி சம்பவத்தை மட்டும் விவரித்து கூறினார். தொடர்ந்து மெர்சல் படம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது.