3 மேட்டர்கள்.. 13 திமுக அமைச்சர்கள்.. அஸ்திரத்தை கையிலெடுத்த எடப்பாடி.. "அவரை" சந்திக்க போறாராமே?
ஸ்டாலினை விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: திமுகவுக்கு எதிரான நடவடிக்கையில் அதிமுக மேலிடம் இறங்க போவதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, 13 அமைச்சர்களுக்கு எடப்பாடி தரப்பு குறி வைத்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்திய பிறகு, மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை திமுக அரசு தூசி தட்டி எடுத்தது.. இதற்காகவே ஒரு டீமை இறக்கியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்..
இப்படி ஒரு தகவல் திமுக தரப்பில் வெளியானதுமே, மாஜிக்கள் அலர்ட் ஆனார்கள்.. சிலர் திமுகவின் விவிஐபிக்கள் மூலம் தூது நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.. சிலர் ஸ்டாலினை பாராட்டி பேட்டி தந்தார்கள்.. தெரியாம பேசிட்டேன் என்பது போல பலரது பேச்சுக்களும் வெளியாகியிருந்தன..

அறிக்கை
மேலும் சிலரோ, வழக்கறிஞர்கள் டீமை நாடினார்கள்.. அதிலும் கொங்குவில் உள்ள 2 மாஜிக்கள் 3 வக்கீல்களை நியமித்ததாகவும், ஆனால், எடப்பாடியோ 30 வக்கீல்களை தன்தரப்பில் இறக்கி விட்டதாகவும் செய்திகள் கசிந்தன. அதுமட்டுமல்ல, ஜெயக்குமார், சண்முகம், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, சம்பத் உள்ளிட்ட மாஜிக்கள், எடப்பாடி பழனிச்சாமியிடம் இதை பற்றி பேசியிருக்கிறார்கள்.. 'ஊழல் குறித்து தனித்தனியாக எங்களை லிஸ்ட் கேட்டிருக்கிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமியிடம் மாஜிக்கள் புலம்பினார்களாம்..

சமாளிப்பு
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "யாரும் கவலைப்படாதீங்க.. யார் மீதும் திமுக புதிதாக வழக்குப் போடாது. ஏற்கனவே கோர்ட் உத்தரவின் பேரில் சிலர் மீது விஜிலென்ஸ் பதிவு செய்த வழக்குதான் விசாரணைக்கு வரும். அதை சமாளிப்பது பெரிய விஷயமல்ல.. சீனியர்கள் எல்லோர் மீதும் வழக்கு போட்டால் நம்மிடமும் ஒரு அஸ்திரம் இருக்கிறது. அதை பயன்படுத்துவோம். 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களுக்கு அப்போதைய திமுக அமைச்சர்கள் மீதும் இதே லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குகள் உள்ளன. கடந்த 10 வருஷமாக நாமும் அதை தூசு தட்டவில்லை.

தைரியம்
அதனால் அவர்கள் அதை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். அப்போது அமைச்சர்களாக இருந்த பலர் இப்போதைய திமுக அரசிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்... அவர்களின் ஊழல் ஃபைல்களின் நகல் என்னிடமும் இருக்கிறது... அதனால், நம் மீது வழக்கு பாய்ந்தால் திமுக அமைச்சர்கள் மீதான கடந்த கால ஊழல் ஃபைல்களை தூசு தட்டி கோர்ட்டை நாமும் அணுகுவோம்... கவலைப்படாதீர்கள் என்று தைரியம் சொல்லியதாக செய்திகள் பரபரத்தன.

தேர்தல் அறிக்கை
இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த மாதம், திமுக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றுகூறி அதிமுக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.. அதன்படி, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்.. அப்போது செய்தியாளர்கள் "வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே, ஊழல் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதே திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்களே" என்று கேட்டனர்.

நிலுவையில் வழக்கு
அதற்கு எடப்பாடி , "இப்போ அவங்க ஊழல் அமைச்சரைத் தானே வச்சிருக்காங்க. நீங்க அமைச்சரா இருந்தாலும் கோர்ட்டில் ஆஜராகணும்னு இன்னைக்கு நீதிமன்றமே சொல்லியிருக்கே... அம்மா இருந்தப்போ, பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதுசம்பந்தமான வழக்கு கோர்ட்டில் இன்னமும் நிலுவையில் இருக்கே.. அதை மறந்துட்டு அவங்க பேசக்கூடாது" என்றார்.. அதாவது தாங்கள் ஊழல் செய்யவில்லை என்பதை சொல்லாமல், திமுகவும் ஊழல் செய்தார்களே என்ற ரீதியில் எடப்பாடி பதிலளித்திருந்தார்.

ஊழல் பட்டியல்
இதே அமைச்சர்கள் பற்றிதான் தன்னுடைய உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் எடப்பாடி பேசி வருகிறார்.. "இன்னைக்கு அமைச்சரவையில் பார்த்தீங்கன்னா, 8 முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவினர்தான்.. வாடகைக்கு புடிச்சிட்டு போய் அமைச்சரவையை அமைச்சிருக்காங்க.. ஏன்னா அந்த கட்சியில் ஆள் இல்லை.. வாடகைக்கு டாக்சியில் போவோம் இல்லையா, அந்த மாதிரி, அமைச்சராக்கியிருக்காங்க.. அப்படிப்பட்ட கட்சி நம்மை பார்த்து அவதூறா பேசிட்டு இருக்கு.. அதான் வேடிக்கையா இருக்கு" என்று சொல்லி வருகிறார். இப்படி திமுக அமைச்சர்களை பற்றி பேசினால், முதல்வரின் கோபம் அவர்கள் மீது திரும்பும் என்றே எடப்பாடி கணக்கு போட்டு வருவதாக தெரிகிறது.

3 மாங்காய்கள்
இப்போது விஷயம் என்னவென்றால், அதே ஊழல் அஸ்திரத்தை திமுக பக்கம் திருப்பி விடப்போகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடிக்க திட்டமிட்டுள்ளார்.. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலைமை எடப்பாடிக்கு வந்துள்ளது.. மற்றொருபுறம் சசிகலாவை சமாளித்து, அதிமுகவில் தன்னுடைய சரிந்து வரும் செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டி உள்ளது.. மற்றொரு புறம் திமுக அரசுக்கு ஒரு கிலியை ஏற்படுத்தி எச்சரிக்கை தர வேண்டி உள்ளதாக கருதுகிறார்.

ஆளுநர் ரவி
அதனால்தான், திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 அமைச்சர்களின் மீதும் குறி வைக்கப்பட்டுள்ளதாம்.. அவர்கள் மீதான ஊழல் புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ளதால், அகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளிக்க போகிறாராம்.. அந்த லிஸ்ட்டில் முக்கியமானவராக செந்தில் பாலாஜி உள்ளார்.. ஏற்கனவே இவர்மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளதால், எடப்பாடி அளிக்க போகும் புகாரால் மேலும் சிக்கல் வரலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இது திமுகவுக்கு சற்று கலக்கத்தை தந்து வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதேசமயம், இப்படித்தான் அதிமுக ஊழல் அமைச்சர்கள் திமுக அன்று ஊழல் புகார் பட்டியலை தந்தது.. ஆனால் அதன்பேரில் எதுவுமே நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. இப்போது எடப்பாடி புகார் தந்தாலும் அப்படியேதான் ஆளுநர் தரப்பு ரியாக்ட் செய்யும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கொடநாடு விஷயத்தில் எடப்பாடியை பாஜக கைவிட்ட நிலையில், புதிய ஆளுநர் மட்டும் எப்படி உதவுவார்? என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்..!












Click it and Unblock the Notifications