கண்ணீர் விட்ட எடப்பாடி.. "என் அண்ணன் ஓபிஎஸ் இப்படி ஒரு இழப்பை எப்படி தாங்குவார்".. இரங்கல் அறிக்கை
ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார்
சென்னை: "அண்ணன் ஓபிஎஸ், இந்த பேரிழப்பை எப்படி தாங்குவார்?.. என் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இந்த வேதனையை தாங்கும் சக்தியை கொடு என்று பிரார்த்திக்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி, கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பலனின்றி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

அஞ்சலி
தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்... அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி எம்எல்ஏ உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.. ஓபிஎஸ் மற்றும் அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோருக்கு முதல்வர் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர்.

ஆறுதல்
அதேபோல, மருத்துவமனையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதலாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன், துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி உள்ளிட்டோர் உடனிருக்கிறார்கள்.. விஜயலட்சுமியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: "அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த பேரிழப்பை எப்படித் தாங்குவார் என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடிக்கிறேன். எல்லோருக்கும் உதவும் நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரிக்கு இப்படி ஒரு துயரம் இருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அண்ணியார் விஜயலட்சுமி
என் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை கொடு என்று பிரார்த்திக்கிறேன்... மறைந்த அண்ணியார் விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவருடைய இல்லத்தில் நான் சந்தித்த போதெல்லாம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் உயர்ந்த உள்ளத்துடனும் என்னை உபசரித்தது நினைத்து, அந்த நல்ல இதயம் நம்மை விட்டு பிரிந்தது என்று வேதனைப் படுகிறேன்.

பிரார்த்திக்கிறேன்
அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் - திருமதி விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு பிள்ளைகளான தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளரும், கழக நாடாளுமன்ற மக்களவை குழு தலைவருமான ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் உள்ளிட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் உற்றார் , உறவினர்களுக்கும் இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அண்ணியார் திருமதி விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications