"கூல் தலைவர்" எங்கே?.. வேட்டியை மடித்து கட்டி குதித்த எடப்பாடி பழனிசாமி.. வட சென்னையை அள்ளி.. சபாஷ்
வடசென்னை அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்
சென்னை: சத்தமே இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஒரு விஷயத்தை செய்து முடித்துள்ளார்.. இது திமுகவை திகைக்க வைத்துள்ளதுடன், அமமுக வயிற்றில் கிலியை கிளப்பி விட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாகவே கட்சி தாவல்கள் நடந்து வருகிறது.. அதிலும் திமுகவில் பெரும்பாலானோர் இணைந்து வருகிறார்கள்.. அதிலும் அமமுகவை சேர்ந்தவர்களே அதிகம் இணைந்து வருகிறார்கள்.
அமமுக நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த பரமசிவ அய்யப்பன், தன் ஆதரவாளர்களோடு திமுகவில் சில தினங்களுக்கு முன்பு இணைந்தார்..!

நிர்வாகிகள்
அதேபோல, முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.. பிறகு, முன்னாள் அதிமுக அமைச்சரும் டிடிவி தினகரனின் ஆதரவாளராகவும் அமமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் உள்ள பழனியப்பனை அமமுகவில் இருந்து திமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதாவது ஜுனியர்களை மட்டுமல்லாமல் சீனியர்களையும் குறி வைத்து திமுக களம் இறங்கி உள்ளது.

டிடிவி தினகரன்
இதற்கெல்லாம் 2 காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.. ஒன்று, டிடிவி தினகரன் ஒதுங்கியே அரசியல் செய்து வருவதாகவும், இந்த தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு பெரிதாக எதிலுமே பங்கெடுத்து கொள்ளாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல், பாதியாக வீழ்ந்து கிடக்கும் வாக்கு வங்கியை உயர்த்தும் முயற்சியிலும் ஈடுபடாமல் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சசிகலா
மற்றொரு காரணம், எடப்பாடி பழனிசாமிக்கு, கட்சியை கைப்பற்றவும், சசிகலாவை சமாளிக்கவும் நேரம் சரியாக இருக்கும்போது, அதிருப்தியாளர்களை சரிகட்ட தவறிவிட்டார்.. இதுதான் திமுகவுக்கும் பெரிய பிளஸ் ஆகி போய்விட்டது என்று சலசலக்கப்பட்டது.. இப்படி ஒரு முணுமுணுப்பு எடப்பாடி பழனிசாமியின் காதில் விழுந்துவிட்டதா தெரியவில்லை.. வேட்டியை மடித்து கட்சி, சசிகலாவை தவிர்த்து, தன்னுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்பி உள்ளார்.

ரிசல்ட்
அந்த வகையில், அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.. அதுவும் அமமுகவில் உள்ளவர்களை குறி வைத்து இறங்கி உள்ளார்.. இந்த முயற்சிக்கு நல்ல ரிசல்ட்டும் கிடைத்துவிட்டது.. வடசென்னை அமமுகவின் முக்கிய புள்ளிகளை தட்டி தூக்கிவிட்டார்..

எடப்பாடி பழனிசாமி
இதுகுறித்தும் அதிமுக தலைமையிடம் இருந்து ஒரு ட்வீட் வெளியாகி உள்ளது.. "மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, தலைமைக் கழகத்தில் இன்று அமமுக வட சென்னை நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்" என்று பதிவாகி உள்ளது. இந்த விஷயத்தை பொறுத்தவரை, அதிமுகவில் உள்ள அதிருப்திகளைவிடவும், அமமுக அதிருப்தியாளர்கள் மீதுதான் கவனம் குவிந்து வருகிறது..

கூடாரம் காலி?
ஏனென்றால், அமமுகவின் கூடாரம்தான் காலியாகி கொண்டிருக்கிறது.. ஒருகாலத்தில் அமமுகவை பார்த்தாலே விமர்சித்து கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது அந்த கட்சியின் மீது கவனத்தை செலுத்தி உள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.. அதுவும் தன்னுடைய செல்வாக்கு மிகுந்த கொங்குவை விட்டுவிட்டு, திமுக ஆதிக்கம் செலுத்தும் சென்னையில் இந்த புள்ளிகளைதன்வசமாக்கியது அதைவிட முக்கியமாக பார்க்கப்படுகிறது.. பார்ப்போம்..!

ஷாக்
ஆனால், தினகரன் என்ன முடிவில் இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை.. இப்படியே வீட்டில் முடங்கியிருக்காமல் தொண்டர்களை சந்தித்து அடிக்கடி பேச வேண்டும்... களப்பணியில் இறங்க வேண்டும்.. அதிருப்திகளை சமாதானப்படுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் அமமுக என்ற கட்சியே நாளடைவில் காணாமல் போய்விடும்.. கூல் தலைவர் இறங்கி வருவாரா?












Click it and Unblock the Notifications