டிடிவி.தினகரனும் இல்லை! ஓபிஎசும் இல்லை! ஆனாலும், இரட்டை இலை வாக்குகளை மிஸ் செய்த எடப்பாடி! பின்னடைவு
டிடிவி தினகரன், ஓபிஎஸ் வேட்பாளர்கள் இல்லாத போதிலும் அதிமுக மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான வாக்குகளை வைத்துப் பார்க்கும் போது, அதிமுகவுக்கு அது நல்ல செய்தியாக இல்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ் வேட்பாளர்கள் இல்லாத போதிலும் இரட்டை இலை வாக்குகளை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி தவறியது போலவே வாக்கு எண்ணிக்கை உள்ளன.
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் அங்குத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தலுக்கு முன்பு அனைத்து கட்சிகளும் இதில் தீவிர பிரசாரத்தில் இறங்கினர்.

ஈரோடு கிழக்கு
திமுக தரப்பு இந்தத் தேர்தலைக் கவுரவ பிரச்சினையாகக் கருதுகிறது. இதன் காரணமாகவே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தங்கள் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே, திமுக மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் இறங்கினர். பெரும்பாலான அமைச்சர்கள் ஈரோடு கிழக்கிலேயே முகாமிட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் கடைசி நாளில் அங்குப் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் சார்பிலும் தனியாகக் குழு ஒன்று அமைத்து பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

அதிமுக
அதேபோல அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கினார். வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னரே, அதிமுக தரப்பில் பெரிய குழப்பம் நிலவியது. அங்கு எடப்பாடி பழனிசாமி தென்னரசுவை வேட்பாளராக அறிவித்த நிலையில், ஒபிஎஸ் தரப்பிலும் செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்தனர். இரு தரப்பும் தனியாகக் குழுக்களை அமைத்துத் தேர்தல் பணிமனைகளையும் அமைத்தனர். இதனால் அதிமுக தொண்டர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.

ஓபிஎஸ் தரப்பு
அதிமுக வேட்பாளரைப் பொதுக்குழு தேர்வு செய்யலாம் என்றும் வேட்பாளர் படிவத்தில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்துப் போடலாம் என்றும் அறிவித்தனர். இதையடுத்து பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி தரப்பு வேட்பாளருக்கே இருந்ததால்.. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றார். முதலில் ஈரோடு கிழக்கில் இரட்டை இலைக்காகப் பிரசாரம் செய்வோம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறிய போதிலும், அவர்கள் கடைசி வரை வெளியே வரவே இல்லை.

டிடிவி தினகரன்
அதேபோல முன்பு அதிமுகவில் இருந்த டிடிவி தினகரன் இப்போது அமமுக என்று தனிக்கட்சியை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த இடைத்தேர்தலிலும் டிடிவி தினகரன் முதலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அமமுக சார்பில் சிவ பிரசாந்த் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கலும் கூடச் செய்தார். இருப்பினும், கடைசி நிமிடத்தில் அமமுக தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது. இடைத்தேர்தலில் நிச்சயம் குக்கர் சின்னம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியதால், தேர்தலில் வாபஸ் பெறும் முடிவை எடுத்தனர்.

அமமுக
இதன் மூலம் இரட்டை இலை வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கே வரும் சூழல் உருவானது. அதிமுகவில் இருந்த டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற கழகத்தைத் தொடங்கினார். 2019 மக்களவை தேர்தலில் இவர் களமிறங்கிய போதிலும் அது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே சசிகலா சிறையில் இருந்து வெளிவந்துவிட்டார். அவர் 2021 தேர்தலில் அமமுகவுக்கு ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அப்படி ஆதரவு கொடுக்கவில்லை. இதையடுத்து அமமுக 2021 தேர்தலிலும் களமிறங்கியது. இருப்பினும், அதிலும் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. டிடிவி தினகரனே தோல்வியடைந்தார்.

இரட்டை இலை வாக்குகள்
இருப்பினும், அமமுக போட்டியிட்ட பல இடங்களில் இரட்டை வாக்குகளைப் பிரித்ததாக சொல்லப்பட்டது. இதுவும் அதிமுக ஆட்சியை இழக்கக் காரணம் என்று சொல்லப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல்களிலும் இதுவே தொடர்ந்தது. இந்தச் சூழலில், பல தேர்தல்களுக்குப் பின்னர் முதல் முறையாக இதில் இரட்டை இலை வாக்குகள் சிதறாமல் இருந்தது. அமமுக தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு பல்வேறு காரணங்களைச் சொல்லி தங்கள் வேட்பாளரைக் கடைசி நேரத்தில் பின் வாங்க வைத்தது. இதனால் இரட்டை இலை வாக்குகள் ஒன்றாகும் சூழல் உருவானது.

தவறிய எடப்பாடி
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இரட்டை இலை வாக்குகள் அதிமுகவுக்கு வருவதை உறுதி செய்ய எடப்பாடி தவறியதாகவே தெரிகிறது. காங். வேட்பாளர் 1.10 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அதிமுக வெறும் 43 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக மிக பெரிய தோல்வியடைந்துள்ளது. டிடிவி, ஓபிஎஸ் களத்தில் இல்லாத போதிலும், இரட்டை இலை வாக்காளர்கள் முழுமையாக எடப்பாடி தலைமைக்கு வாக்களிக்கத் தயங்குவதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications