ஒரே விமானத்தில்.. ஒரே வரிசையில்..இடது புறம் எடப்பாடி.. வலதுபுறம் ஸ்டாலின்.. என்ன நடந்தது!
சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரே விமானத்திலும், ஒரே வரிசையில் இடது புறம் எடப்பாடியும், வலது புறம் ஸ்டாலினும் பயணித்தனர். இருந்த போதிலும் ஒரு வார்த்தை கூட எடப்பாடி பழனிச்சாமியும், முக ஸ்டாலினும் பேசிக்கொள்ளவில்லை.
அரசியலில் இருதுருவங்களாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக ஸ்டாலின் இடையே தனிப்பட்ட முறையில் நல்ல புரிதல் இருக்கிறது. அண்மையில் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார் முக ஸ்டாலின்.
இதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் அரசியலாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியும், முக ஸ்டாலினுக்கும் இடையே மாற்றுக்கருத்து இல்லை. இருவரும் ஒற்றுமையாக ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். நேற்று இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அரசாணையை திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டவும் செய்தார்.

தேவர் குருபூஜை விழா
இந்த சூழலில் தேவர் குருபூஜை விழாவுக்கு ஒரே விமானத்தில சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்த போதும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொள்ளவில்லை. இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இருவரும் பயணம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், தேவர் ஜெயந்தி குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் முக.ஸ்டாலினும் நேற்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன் பதிவு செய்து பயணித்தனர்.

வலதுபுறம் ஸ்டாலின்
விமானத்தின் முதல் வரிசையில் இடதுபுறம் ஜன்னல் பக்க இருக்கையில் முதலமைச்சர் பழனிசாமியும், வலது புறம் ஜன்னல் பக்க இருக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அமர்ந்தனர். ஸ்டாலின் உடன் பூங்கோதை, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

பேச வாய்ப்பில்லை
அரசியலில் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், இந்த பயணத்தின் போது இருவரும் ஏதாவது பேசிக் கொள்வார்களா என்று விமானத்தில் வந்தவர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்துக்கூட பேசிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால், பயணித்த அனைவருமே முகக்கவசம், ஷீல்ட் அணிந்திருந்ததால், பார்த்து பேச வாய்ப்பில்லாமல் போனது.

பின்னர் ஸ்டாலின்
விமானம் மதுரையை அடைந்ததும், முதலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியே சென்றார். அதன் பின்னரே முக ஸ்டாலின் புறப்பட்டார். விமான நிலையத்தின் வெளியே அதிமுக தொண்டர்களும், திமுக தொண்டர்களும் தங்கள் தலைவர்களை உற்சாகமாக வரவேற்றார்கள். ஒரே நேரத்தில் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்தது அண்மைக்காலத்தில் இது வரலாற்று நிகழ்வு ஆகும்.












Click it and Unblock the Notifications