வேண்டவே வேண்டாம்.. ஸ்டாலினிடம் சொன்ன அமைச்சர்கள்..சோர்ஸ்களிடம் விசாரித்த எடப்பாடி.. என்னங்க நடந்தது?
சென்னை: தமிழகத்தில் ஊராக உள்ளாட்சித் தேர்தல்களுக்குத் தேவையான வாக்குப் பெட்டிகளை தயார்படுத்தி வைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.
முந்தைய எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பதவி காலம் வருகிற டிசம்பர் மாதத்தோடு முடிகிறது. அதனால், ஊராக உள்ளாட்சி தேர்தலை தற்போதைய திமுக அரசு நடத்துமா? தள்ளிப்போடுமா? என்கிற விவாதங்கள் பிரதான அரசியல் கட்சிகளிடம் நடந்து கொண்டிருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசில் அதிகாரிகள் மட்டத்தில் உள்ள தனது சோர்ஸ்கள் மூலம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த நிலையை அறிந்துகொள்ள முயற்சித்திருக்கிறார். அவருக்குத் தேவைப்படும் தகவல்கள் கோட்டையிலிருந்து தரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், சென்னையைத் தவிர்த்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவை 5-ந்தேதி (நேற்று) பிறப்பித்திருக்கிறார் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.
அந்த உத்தரவில், ''ஊரக உள்ளாட்சிகளுக்கு எதிர்வரும் சாதாரண / தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு தேர்தலுக்குத் தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகிறது. இதில், வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சிகளுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளின் தரம் குறித்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நேரில் சென்று ஆய்வு செய்து வாக்குப்பெட்டிகளின் தற்போதைய நிலையை ஆராய வேண்டும்.
பழுதுப் பட்டிருந்தால் அதை சரி செய்ய வேண்டும். வாக்குப்பெட்டிகளை சரி செய்வதற்கும், சுத்தம் செய்வதற்கும் ஒரு பெட்டிக்கு 21 ரூபாய் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை பரிந்துரைத்துள்ளவாறு அனுமதிக்கப்படுகிறது'' என்று தெரிவித்திருக்கிற மாநில தேர்தல் ஆணையம், வாக்குப்பெட்டிகளின் சுத்தம் மற்றும் தரம் குறித்து எப்படி இருக்க வேண்டும் என்பதையும் 6-விதமான குறிப்புகளையும் கொடுத்துள்ளது.
மேலும், ''வாக்குப்பெட்டிகளை பிற துறைகளுக்கு, பிற மாவட்டங்களுக்கு மற்றும் பிற மாநிலங்களுக்கு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பின், அனைத்து வாக்குப்பெட்டிகளையும் மீளப்பெறப்பட்டு தேர்தலுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்'' என்றும் அந்த உத்தரவில் தெரிவித்திருக்கிறார் ஆணையத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.
கேள்வி மேல் கேள்வி: பதவி காலம் முடியவிருக்கும் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையம் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் நடக்குமா? என்கிற கேள்வி அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது.
இதுகுறித்து கோட்டையிலுள்ள உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ''தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் தன்னை தயார்படுத்திக் கொள்வது இயல்பான விசயம் தான். ஆனால், அவர்கள் தயாராகிறார்கள் என்பதற்காக உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா? தள்ளி வைக்கலாமா? என்கிற முடிவை ஆளும் கட்சித்தான் எடுக்கும்.
ஆளும் கட்சியின் நிலைப்பாட்டைப் பொறுத்தே உள்ளாட்சி தேர்தலின் நிலை தெரியும். அந்த வகையில், பதவி காலம் முடிவதற்குள் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தற்போதைய திமுக அரசுக்கு ஆர்வம் இல்லை. இந்த தேர்தலை நடத்த வேண்டாம் என 27 மாவட்ட திமுக நிர்வாகிகளிடமிருந்து கட்சி தலைமைக்கு தகவல் தரப்பட்டுள்ளது. அதனடிப் படையில் சீனியர் அமைச்சர்களும் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.
அதனால், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரியை நியமித்து விடலாம் என்கிற திட்டத்தில் திமுக அரசு இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு வாய்ப்பில்லை. விரைவில் தனி அதிகாரிகள் நியமனம் அறிவிப்பு வரலாம்'' என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். அரசின் நிலைப்பாடு இதுவாக இருந்தாலும் தன்னை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது மாநில தேர்தல் ஆணையம்.












Click it and Unblock the Notifications