கம்பி எண்ணும் அமைச்சர்.. செந்தில் பாலாஜி, பொன்முடியை சீண்டிய எடப்பாடி - மதுரை குலுங்க குலுங்க பேச்சு
சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்து உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு அமைச்சர் கம்பி எண்ணுவதாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் பேசிய அவர், "மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி என்னும் நான் உழைப்பால் உயர்ந்தவன். தொண்டராக இருப்பவர் அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன்.

இன்று திமுகவின் வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு விட்டனர். திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. உயர்கல்வித் துறை அமைச்சருக்கு எதிரானன வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது.
ஊழல் வழக்கில் விடுவிக்கப்பட்ட திமுக அமைச்சர்களை நாம் சும்மா விட மாட்டோம். ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் ஒருவர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். தினமும் டாஸ்மாக்கில் ஒரு கோடி மது பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டாஸ்மாக்கில் ஏழை எளியோர் மது வாங்கினால் ரூ.10 அதிகம் கேட்கிறார்கள். தினமும் ரூ.10 கோடி முறைகேடு நடக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டவிரோத பார்கள் 3,600 இயங்கி இருக்கின்றன. கலால் வரி செலுத்தாமல் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் முறைகேடான பார் மூலம் கிடைக்கிறது. திமுக மேலிடத்துக்கு வருவாய் எல்லாம் செல்கிறது. மேலிடம் என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அதிமுகவினருக்கு எதிரான வழக்கை சட்டப்போராட்டம் நடத்தி வெல்வோம்.
அதிமுகதான் காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்தது. நமது ஆட்சியில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கொரோனா பற்றி தெரியாமலேயே நாம் தடுத்தோம். கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்தோம். ஏராளமான கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளை திறந்து இருக்கிறோம்.
கச்சத்தீவை மீட்போம் என்று ஸ்டாலின் பச்சைப்பொய் பேசினார். இந்த பழனிசாமி பொய் பேசி மக்களை ஏமாற்றுபவன் இல்லை. இந்த பழனிசாமி சாதித்து காட்டுபவன். திமுக அரசை பொறுத்தவரை பொய்தான் மூலதனம். கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது திமுக காலம். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தட்டிக்கேட்கவில்லை.
ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டு கச்சத்தீவை மீட்க வழக்கு தொடர்ந்தார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அதிமுக அரசு கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை நிறைவேற்றியது. நீட் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் போடுகிறது. இன்று உதயநிதி ஸ்டாலின் நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒரு நாடகம். நீட் விலக்கு பெற 2 ஆண்டில் என்ன செய்தீர்கள்?
திமுகதான் நீட் தேர்வை கொண்டு வந்தது. அதிமுக அதை தடுக்க போராட்டம் நடத்தியது. இந்த மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்று உள்ளனர். இதுவரை இவ்வளவு பேர் எந்த மாநாட்டுக்கும் வந்தது இல்லை. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு சரித்திர சாதனையை படைத்து இருக்கிறது." என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications