புயலை கிளப்புவாருன்னு பார்த்தா.. புஸ்ஸ்ன்னு ஆகிடுச்சே! பின்வாங்கும் செங்கோட்டையன்.. எடப்பாடி ஹேப்பி?
சென்னை: அதிமுகவில் பெரிய பிரளயத்தை கிளப்ப போகிறார்.. எடப்பாடி பழனிசாமிக்கு பிரஷரை ஏற்ற போகிறார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட செங்கோட்டையன் அப்படியே கப் சிப் என்று ஆகி உள்ளார். அதிலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சந்திப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட செங்கோட்டையன் அப்படியே அமைதியாகிவிட்டார்.
அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. சிலர் வேண்டுமென்று வதந்திகளை பரப்புவது வேதனை அளிக்கிறது. யார் வதந்திகளை பரப்புகிறார்களோ அவர்களே நிறுத்தி கொண்டால் நலமாக இருக்கும். இது எச்சரிக்கை அல்ல. அன்போடு கேட்டு கொள்வதாக கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

பின்வாங்கும் செங்கோட்டையன்
நேற்றைய முன் தினம் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த போது
நேற்றைய முன் தினம் மற்றும் நேற்று பல்வேறு விளக்கம் அளித்ததற்கு வேண்டுமென்று சிலர் வதந்திகளை பரப்பி வருவது வேதனை அளிக்க கூடிய ஒன்று. அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை, சொந்த வேலையை முடித்துவிட்டு ரயிலில் கோபி வந்தடைந்தேன், தொடர்ந்து வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்,
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இயக்கம் வலிமை பெறவேண்டும். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் கனவு நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அதற்குப் பிறகு எந்த கருத்தையும் நான் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. வேண்டும் என்று வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள்,வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது, ஓபிஎஸ்-ஐ நான் சந்திக்கவில்லை.
செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மோதல்
நேற்று முன்தினம் அதற்கான பதிலை தெரிவித்துவிட்டேன் யாரையும் சந்திக்கவில்லை, இன்று வரை குறிப்பிட்டு யாரையும் சந்திக்கவில்லை, அவபெயரை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்பாடுகளை செய்துவருகிறார்கள், இது மிகவும் வேதனை அளிக்கிறது. நல்ல செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கவேண்டுமே தவிர இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம்.
வதந்திகள் யார் பரப்புகிறார்கள் என்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை, யார் வதந்திகளை பரப்புகிறார்களோ அவர்களே நிறுத்தி கொண்டால் நலமாக இருக்கும். இது எச்சரிக்கை அல்ல என்றார். அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தூய்மையாக பணியாற்றியுள்ளேன், விசுவாசம் உள்ள தொண்டனாக இருந்துள்ளேன், கோபி தொகுதி மக்கள் எனக்கு வாக்களித்த மாபெரும் வெற்றி அளித்துள்ளனர், மக்கள் தான் என் உயிர் மூச்சு, தொண்டர்கள் தான் என் உயிர் மூச்சு, கழகம் தான் என் உயிர் மூச்சு என்பதை தெரிவித்து கொள்கிறேன்., என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
சண்டை இல்லை சமாதானம்
இதன் மூலம் செங்கோட்டையன் சண்டைக்கு தயாராக இல்லை. சமாதானமாக போக நினைக்கிறார் என்று தோன்றுகிறது. அதாவது எடப்பாடி பழனிசாமியை வெளிப்படையாக எதிர்க்காமல் செங்கோட்டையன் அமைதி காக்கிறாரோ என்று தோன்றுகிறது.
அதிலும் பிரிந்த தலைவர்களை சேர்க்க போகிறேன் என்று கூறிய செங்கோட்டையன் அந்த தலைவர்களை சந்திக்க கூட யோசிக்கிறார். அதை பற்றி வெளியாகும் செய்திகளை கூட மறுக்கிறார் என்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்போதைக்கு அதிமுகவில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் வராது என்றே அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications