தவிர்க்கப்படும் "மோடி" பெயர்.. எடப்பாடி பழனிசாமியை கவனிச்சீங்களா? அதை மட்டுமே பேசவே இல்லையே.. ஏன்?
சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் அதிமுகவிற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒற்றை ஆளாக தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். நேற்று பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தும் கூட பிரச்சாரத்தில் பேசினார்.

நேற்று சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ராம சீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மதுரையில் பாஜக பொதுச் செயலாளர் பேசி இருக்கிறார். மதுரை பாஜக வேட்பாளராக இருக்கும் ராம சீனிவாசன் பேசி உள்ளார். அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றிப் பேசியுள்ளார்.
இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகுமாம். ஏய். உன்னைப் போல எத்தனை பேரை பார்த்தது அதிமுக. நான் உட்பட இந்த மேடையில் இருப்பவர்கள் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கும் உழைப்பாளிகள் நாங்கள். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை.
தாமரை சின்னம்: அதிமுக இருக்காது என்று சொல்கிறார். பொறுத்திருந்து பார், இந்த தேர்தலோடு பெட்டி அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் அடையாளம் இன்றி போய்விடுவீர்கள். 1998ல் பாஜகவை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான். பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான். எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?" என ஆவேசமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
மோடி பெயர் தவிர்ப்பு; இந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. என்னதான் இந்த பிரச்சாரத்தில் பாஜகவை அவர் எதிர்த்தாலும் கூட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை எடப்பாடி பழனிசாமி தவிர்த்து இருக்கிறார்.
இந்த பிரச்சாரம் முழுக்கவே பாஜகவை விமர்சனம் செய்தாலும்.. இது பிரதமருக்கான் தேர்தல் என்றாலும் கூட்டணியில் இல்லாத பாஜகவை சேர்ந்த மோடியை விமர்சனம் செய்வதை எடப்பாடி தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
பாஜகவை தாக்க என்ன காரணம்; எடப்பாடி இப்படி திடீரென பாஜகவை தாக்க பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் பேசியதுதான் காரணம். மதுரையில் அவர் பேசுகையில், "ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள எஃகு கோட்டை அதிமுக என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக என்றைக்கு ஒன்றரை கோடி ஓட்டு வாங்கி இருக்கிறது? ஜெயலலிதா இருக்கும் போது இருந்த அதிமுகவை பற்றி பேசவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு எந்த தேர்தலில் அதிமுக ஒன்றரை கோடி ஓட்டுகளை வாங்கி உள்ளது? ஜெயலலிதா கூட்டணியே வேண்டாம் என்று சொல்லி தனித்துப் போட்டியிட்டார். எடப்பாடி பழனிசாமியால் அப்படி தனித்து போட்டி போட முடிந்ததா?, என்று விமர்சனம் வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications