அதிமுகவில் எந்த ஜாதிக்கு அதிக சீட் தெரியுமா? பாமக போனதை விடுங்க.. எடப்பாடி போட்ட திகுதிகு கணக்கு!
சென்னை: அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சமூக பின்னணி பற்றி பார்க்கலாம்.
தேர்தல் களத்தில் சாதி, சமூக பின்புலங்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றன என்பது அனைவரும் மறுக்க இயலாதது. அந்தந்த தொகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளை கொண்ட சமூகத்தவரையே பிரதான கட்சிகள் வேட்பாளர்களாக களமிறக்குவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே இதுதான் நிலை.

சில சமயங்களில், பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த வேட்பாளர்கள், சிறிய எண்ணிக்கையில் உள்ள சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரிடம் தோல்வியுறுவதும் நடக்கும். ஆனால், அதெல்லாம் அபூர்வம். எனவே, பெரும்பாலான கட்சிகள், அந்தந்த தொகுதிகளில் அதிகமாக வாக்கு வங்கி கொண்ட சாதிகளைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி வருகிறார்கள்.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதிமுக கூட்டணியில் இதுவரை 3 கட்சிகளுக்கு மொத்தமாக 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதிமுக. எனவே, மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இன்று 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த முதற்கட்ட பட்டியலில் உள்ள 16 வேட்பாளர்களின் விவரங்களை பார்க்கலாம்.
அதிமுக வேட்பாளர்கள் சார்ந்த சமூகங்கள்:
வடசென்னை - ராயபுரம் மனோ (வன்னியர்)
தென்சென்னை - ஜெ. ஜெயவர்த்தன் (மீனவர்)
காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர் (தலித்)
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன் (விஸ்வகர்மா)
கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ் (நாயுடு)
ஆரணி - கஜேந்திரன் (வன்னியர்)
விழுப்புரம் (தனி) - பாக்யராஜ் (தலித்)
சேலம் - விக்னேஷ் (வன்னியர்)
நாமக்கல் - தமிழ்மணி (கொங்கு வேளாள கவுண்டர்)
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)
கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல் (கொங்கு வேளாள கவுண்டர்)
சிதம்பரம் (தனி) - சந்திரஹாசன் (தலித்)
நாகப்பட்டினம் (தனி) - சுர்ஜித் சங்கர் (தலித்)
மதுரை - சரவணன் (பிள்ளைமார்)
தேனி - நாராயணசாமி (முக்குலத்தோர்)
ராமநாதபுரம் - ஜெயபெருமாள் (கள்ளர்)
முதற்கட்டமாக இன்று 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 3 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெறாத நிலையில், வன்னியர்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மேலும், கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது, மேலும், 4 தனி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் மொத்தம் 9 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன. வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, சேலம், ஈரோடு, தேனி, நாமக்கல் ஆகிய 9 லோக்சபாதொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக., உதயசூரியன் - இரட்டை இலை சின்னங்கள் நேரடியாக மோதுகின்றன.












Click it and Unblock the Notifications