"கண்டிப்பாக நமக்குத்தான்".. பாஜக இல்லைனாலும் பரவாயில்லை! எடப்பாடியின் "ராஜதந்திரம்".. எல்லாமே ஓவரா?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிர நம்பிக்கையுடன் இருக்கிறாராம், பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும் தனக்கு ஆதரவாக தீர்ப்பு கண்டிப்பாக வரும் என்று அவர் நம்பிக்கையாக இருக்கிறாராம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு இடையில் இந்த பொதுக்குழு வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார்.

ஈரோடு அதிமுக
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்கும் போட்டிக்கு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது. அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணையாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.

தடுக்க வேண்டும்
இதை தடுக்க ஒரே வழி அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வர வேண்டும். அதாவது அதிமுக பொதுக்குழு வழக்கில் ஒரு தீர்ப்பு வந்து அந்த தீர்ப்பை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த தீர்ப்பை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோடு பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளருக்கு சிக்கல் இருக்காது.

வழக்கு வாதம்
ஒருவேளை இந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை என்றாலோ, ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலோ வேட்பாளர் லிஸ்டில் ஓ பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டிய நிலைமை வந்துவிடும். அதோடு எடப்பாடி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுவிடும். இதனால்தான் இந்த வழக்கு தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் உடனே தீர்ப்பு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு காய் நகர்த்தி வருகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறதாம். இதனால் வேட்புமனு தாக்கல் முடிவதற்குள் வழக்கில் தீர்ப்பு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு புஷ் செய்து வருகிறதாம்.

வாதம்
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பளார் பொறுப்புகளை நீக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு இருப்பதாக அவர் வாதம் வைத்து இருக்கிறார். இந்த பொறுப்புகளை உருவாக்கியது பொதுக்குழு. அதனால் இந்த பதவிகளை நீக்குவதற்கும் பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது. பொதுக்குழுவில் முடிவை ஏற்கும் நபரே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். கட்சியின் விதி எண் 7 இதை கூறுகிறது. இந்த பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் நீக்கப்பட்டனர், என்று குறிப்பிட்டு இருந்தார்.

மெஜாரிட்டி
அதோடு கட்சியில் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என்று மெஜாரிட்டி சப்போர்ட் தனக்குத்தான் இருக்கிறது என்பதால் எடப்பாடி நம்பிக்கையாக இருக்கிறாராம். இதனால் கண்டிப்பாக தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்று நினைக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்கில் நாம்தான் வெற்றிபெற போகிறோம். பாஜக இல்லையென்றாலும் கூட இரட்டை இலை நமக்குத்தான் கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக நம்புகிறதாம். அதனால்தான் அவரின் தரப்பு அடித்து ஆட தொடங்கி உள்ளது என்கிறார்கள் எடப்பாடி தரப்பு வட்டாரத்தினர்.

அண்ணாமலை
எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் வரலாம் என்பதால்தான் அண்ணாமலையும் அதிமுகவே பெரிய கட்சி என்று சூசகமாக கூறியதாக தெரிவிக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலையே, ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியின் பவர் + பண பலம் இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்பதால், வலிமையான கட்சிதான் களமிறங்க வேண்டும். எங்கள் கூட்டணியில் வலிமையான கட்சி என்றால் அது அதிமுகதான். நாங்கள் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்போம் என்பதை விரைவில் அறிவிப்போம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதில் முடிவு எடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் அண்ணாமலை அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் வரலாம் என்பதால்தான் அண்ணாமலை இப்படி பேசியதாக கூறப்படுகிறது.

டீம்
கடந்த வாரம் இந்த வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்களையும் இரண்டு தரப்பும் தாக்கல் செய்துவிட்டது. தற்போது வழக்கு தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் லீகல் அணியை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை நீதிபதி தினேஷ் மகேஸ்வரியை சந்தித்து இந்த கோரிக்கையை எடப்பாடி தரப்பு வைக்க உள்ளதாம். பெரும்பாலும் இந்த வழக்கில் பிப்ரவரி 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு நம்பிக்கையாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications