"யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
சென்னை: லோக்சபா தேர்தலில் நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது அதிமுக நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுக்க அமைதியான முறையிலேயே இந்த லோக்சபா தேர்தல் நடந்தது.

இந்த முறை தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக vs பாஜக என மும்முனை போட்டி நிலவியதால் களத்தில் கடைசி வரை அனல் பறந்தது. பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருந்தது.
அதிமுக கூட்டம்: தேர்தல் முடிந்து 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று அதிமுக சார்பில் சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும், சென்னை அதிமுக மாவட்ட செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் மதியம் 1 மணி வரை நடந்துள்ளது.
இதில் தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் எப்படி செயல்பட்டார்கள், வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலில் நிர்வாகிகள் பேசியுள்ளனர். எப்படி பிரச்சாரம் செய்தனர், களநிலவரம் எப்படி இருந்தது என்பதை அவர்கள் விளக்கி உள்ளனர். அடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அப்போது தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
விசுவாசம் இல்லை: எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தலைமை மீது இருந்த விசுவாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி கடிந்து கொண்டு இருக்கிறார். மேலும், அதிமுகவில் நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் மக்களவை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுவதற்கு பதிலாக கடமைக்கு பணியாற்றினார்கள் என்றும் சாடியுள்ளார்.
பல நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்ற அவர், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் நினைக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் செலவுக்காக கொடுத்த பணம் முறையாக செலவுசெய்யப்படவில்லை என்ற எடப்பாடி, முக்கிய நிர்வாகிகளிடம் கொடுத்த பணம் கடைநிலை நிர்வாகிகளை சென்றடையவில்லை என்றும் தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை சிலர் சுருட்டி கொண்டனர் என்றும் சாடியுள்ளார்.
வேலை பார்க்கல: திமுகவினரை போல அதிமுகவினர் பலர் உணர்வுடன் தேர்தலில் பணியாற்றவில்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், சொத்து - குடிநீர் வரி, மின் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகளை அதிமுக நிர்வாகிகள் மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்கவில்லை என்றும் சாடியுள்ளார். இதனால் கிராமங்கள் தவிர தமிழகத்தில் பல பகுதிகளில் அதிமுக வாக்குவங்கி குறைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளும் கூட தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்களை விட்டுவிட்டு புதிதாக கட்சியில் சேர்பவர்களுக்கு பொறுப்பு கொடுத்தால் அது எப்படி என்று கேட்டுள்ளனர். அதற்கு எடப்பாடி, புதியவர்களுக்கு பொறுப்பு கொடுத்தால் தான் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர முடியும் என்று கூறியதாக தெரிகிறது.
அதிருப்தி: ஆக மொத்தத்தில் அதிமுக நிர்வாகிகள் செயல்பாடுகளில் கடும் அதிருப்தியில் இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இப்போது சென்னை மண்டல கூட்டம் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களின் பொறுப்பாளர்களையும் அழைத்து எடப்பாடி கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications