நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்?
சென்னை: அதிமுக - பாஜக - அமமுக கூட்டணி உருவாகியிருந்தாலும் மூன்று கட்சிகளின் தலைவர்களும் மூன்று திசையில் இருக்கிறார்கள் என்று தகவல் கிடைக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தி.மு.க-வை வீழ்த்த ஒன்று சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் (NDA) இப்போது 'நிழல் யுத்தம்' நிஜமாகத் தொடங்கியிருக்கிறது. இலை, தாமரை, குக்கர்... மூன்றும் ஒரே அடுப்பில் வெந்தாலும், சாப்பாடு என்னவோ இன்னும் சரியாக வேகவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்த உடன்பிறப்புகள்!

குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியும் தினகரனும் கடந்த சில நாட்களாக பேசிக்கொள்ளவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் எடப்பாடி, தினகரன் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் தவிர்த்து கடந்து செல்கிறார். தினகரனும் அதே பாணியை கடைபிடித்தபடி இருக்கிறார்.
யார் பெரியவர்?' - ஈகோ யுத்தம்!
எடப்பாடியைப் பொறுத்தவரை, இது அவருக்கு இது அரசியலில் தன் வாழ்வா சாவா போராட்டம். "நாமதான் பெரிய அண்ணன்" என்கிற கெத்தோடு அவர் 167 தொகுதிகளைத் தன் வசம் வைத்திருக்கிறார். ஆனால், டெல்லி ஆசியோடு வலம் வரும் கமலாலயத்து 'சிங்கங்கள்', தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 27 இடங்களை வைத்துக்கொண்டு ஏனோ திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, தென் மாவட்டங்களில் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அ.தி.மு.க-வினர் சரியாக வேலை செய்வதில்லை என்ற முணுமுணுப்பு இப்போதே கேட்கத் தொடங்கிவிட்டது.
கூட்டணி வழியாக அ.தி.மு.க-வுக்குள் மீண்டும் நுழைய நினைத்த டி.டி.வி. தினகரனை, பா.ஜ.க-தான் கையைப் பிடித்துக் கூட்டணிக்குள் இழுத்து வந்தது. "எடப்பாடியை ஏற்க முடியாது" என்று ஆரம்பத்தில் ஆவேசப்பட்ட டி.டி.வி, இப்போது 11 சீட்டுகளுக்காக அமைதி காக்கிறார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியின் படத்தையோ, அ.தி.மு.க-வின் சாதனைகளையோ சொல்ல அவர் தயங்குவது, கூட்டணியின் 'நல்லிணக்கத்தை' நடுத்தெருவில் அம்பலப்படுத்துகிறது.
போனை போட்ட டிடிவி
இன்னொரு பக்கம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அமமுக வேட்பாளர்கள் விரும்பி, அதிமுகவினரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், எந்த ரெஸ்பான்ஸ்சும் இல்லை. இதனை தினகரனின் கவனத்துக்கு அமமுக வேட்பாளர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
குறிப்பாக, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள அதிமுக புள்ளிகள் தங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தால் வாக்குகள் சிதறாமல் விழும் என அமமுக வேட்பாளர்கள் கணக்கு போட்டார்கள். இதற்காக அதிமுக மாஜிக்களிடம் போன் போட்டு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டால், "அண்ணன் பிஸியா இருக்காரு", "வண்டி ரிப்பேர்", "தலைமை கிட்ட கேட்டுச் சொல்றோம்" என மழுப்பலான பதில்களே வருகிறதாம். இந்த 'சைலண்ட் ட்ரீட்மென்ட்' பற்றி தினகரனின் காதுக்குத் தகவல் போக, அவரோ கடுப்பாகிவிட்டாராம்.
விபரத்தைக் கேட்டு டென்ஷனான தினகரன், "நான் பார்த்துக்கிறேன். எடப்பாடியிடம் பேசுகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். ஆனால், எடப்பாடியை அவர் தொடர்பு கொண்டபோது லைனை அட்டென்ட் பண்ணவில்லையாம். அடுத்த ஒரு மணி நேரத்தில் எடப்பாடியின் உதவியாளர், தினகரனை தொடர்பு கொண்டு, ஓய்வு நேரத்தில் அழைப்பதாக எடப்பாடி சொல்லச் சொன்னார் என்பதை மட்டும் சொல்லியிருக்கிறார். ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் தினகரனிடம் பேசவில்லையாம் எடப்பாடி. இப்படி, இருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தபடியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
- சிறப்பு நிருபர்












Click it and Unblock the Notifications