அதிமுக பொதுச் செயலாளராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?.. நடந்தது என்ன? ஓபிஎஸ் கொடுத்த கடும் வார்னிங்?
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்களில் 85 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால் அவர் தலைமை ஒருங்கிணைப்பாளராகவோ இல்லை பொதுச் செயலாளராகவோ பதவியேற்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களால் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக அதிமுகவில் ஒற்றைத் தலைமைதான் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இரட்டை தலைமையால் எந்த வித முடிவையும் நியாயமாக எடுக்க முடியவில்லை. உள்கட்சி பூசல் அதிகரிக்கிறது. மேலும் சசிகலா வேறு அதிமுகவை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறார்.

23 ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம்
இதனால் வரும் 23 ஆம் தேதி பொதுக் கூட்டம் கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர், அதிமுக அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

ஒற்றைத் தலைமை
இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது வெளியேயும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஒற்றைத் தலைமை கோரிக்கையை எழுப்பினர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத சிலரை தொடர்பு கொண்டோம். அவர்கள் கூறுகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் முழு பொறுப்பையும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்க வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

80 சதவீதம்
மாவட்டச் செயலாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோரின் முடிவு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனால் இதை ஓபிஎஸ் மறுத்தார். வெறும் மாவட்டச் செயலாளர்கள் சொல்வதை மட்டும் வைத்து கட்சியை அப்படியே எடப்பாடிக்கு கொடுத்துவிட முடியாது. அவர் (எடப்பாடி) முதல்வராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்றால் நானும் தான் முதல்வராக இருந்துள்ளேன்.

ஜெயலலிதா ஒப்படைத்தார்
இன்னும் சொல்ல போனால் சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் அம்மா (ஜெயலலிதா) சிறை சென்ற போது கட்சியையும் ஆட்சியையும் என்னிடத்தில்தான் ஒப்படைத்தார். அதனால் பொதுக் குழு கூட்டம் நானும் எடப்பாடி பழனிச்சாமியும் வேட்பாளர்களாக நிற்கிறோம். யாருக்கு பெரும்பாலான ஆதரவு கிடைக்கிறதோ அவர்கள் கட்சியை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

தேர்தல்
இதை மீறி தேர்தலே இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுப்பது, அவரையே ஒற்றைத் தலைமை ஆக்குவது என வரிந்து கட்டினால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இணை ஒருங்கிணைப்பாளரின் அனுமதியை பெறாமல் நான் யாரை வேண்டுமானாலும் நீக்க முடியும் என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக ஓபிஎஸ் சொன்னார் என்கிறார்கள்.
Recommended Video

தலைமை ஒருங்கிணைப்பாளர்
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் எப்படியும் டெல்லி தலைமையின் ஆதரவுடன் அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருவதாகவும் வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளராகவோ அல்லது தலைமை ஒருங்கிணைப்பாளராகவோ தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள். இதனிடையே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அவரது வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications