கடைசி ‘பிடி’ கையில் சிக்குமா? எதிர்பார்ப்பில் ஓபிஎஸ்.. எடப்பாடி டீம் ‘கவுன்ட்டர்’ அட்டாக் ரெடி!
நாளை மறுநாள் நடைபெறவுள்ள வழக்கு விசாரணை அதிமுகவின் இரு அணியினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நாளை மறுநாள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவை தயாரித்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தொடர்ந்தார்.
வரும் 17-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் உயர் நீதிமன்றம் யாருக்கு சாதகமான உத்தரவை வழங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் வழக்கு
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டன. அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பொதுக்குழு செல்லும் என்று இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது.

புதிய வழக்கு
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும், அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து சிவில் வழக்கு தொடர்வதற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும், சிவில் வழக்கை தொடரலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

ஓபிஎஸ் தரப்பு வாதம்
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார். இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோஜ் பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடினார்.

தீர்மானங்களுக்கு தடை
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு உள்ளன. பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு, அதில் போட்டியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது கட்சி நிறுவனரின் கொள்கைக்கு விரோதமானது. எனவே பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை. தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

2 வாரங்கள்
அதற்கு ஐகோர்ட் நீதிபதி, எதிர் மனுதாரர்களின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தற்போதைய நிலையில் அதிம.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கு விசாரணை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்து 2 வாரங்களுக்குள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

பதில் தயார்
நாளை மறுநாள் (மார்ச் 17) உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவை தயாரித்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளையோ அல்லது வழக்கு விசாரணை நடைபெறும் நாளான 17ஆம் தேதியோ பதில் மனு தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பாயிண்டுகள்
அதிமுக உட்கட்சி விதிகளின்படியே பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், அதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும், இவற்றை ஏற்றுக்கொண்டே உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இதுவரை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனுவில் பாயிண்டுகளை அடுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கு சாதகமான தீர்ப்பே கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.

யாருக்கு வெற்றி?
அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், இந்த வழக்கு விசாரணை தங்களுக்கு சாதகமாக அமைந்து, அதிமுக விவகாரத்தில் தங்களுக்கு ஒரு வலுவான பிடி கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனால், நாளை மறுநாள் நடைபெறவுள்ள வழக்கு விசாரணை அதிமுகவின் இரு அணியினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. யாருடைய எதிர்பார்ப்பு நிஜமாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications