இந்த முறை பொறுப்பு யாருக்கு? ஓபிஎஸ் குடைச்சலுக்கு மத்தியில் எடப்பாடியின் ஒரே குறி.. இன்றும் மீட்டிங்
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி நடத்துவதற்கு ஓ.பி.எஸ் தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பொதுக்குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்றும் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேற்று தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஆலோசித்தனர்.
4 ஆண்டுகளுக்கு முந்தைய ட்வீட்டால் ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் கைது- போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி!
இந்நிலையில், பொதுக்குழுவிற்கான இடம் தேர்வு செய்யப்படாத நிலையில், அதுகுறித்தும், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதம் குறித்தும் இன்றும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பொதுக்குழு
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பதவியை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயார் நிலையில் இருந்தனர். இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஆதரிக்கும் முடிவோடு வந்திருந்தனர். ஆனால், ஓபிஎஸ் தரப்பு இரவோடு இரவாக புதிய தீர்மானங்களை கொண்டு வர நீதிமன்றத்தில் தடை வாங்கியதால் எந்தவொரு தீர்மானமும் இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவில்லை.
ஜூலை 11
அதே பொதுக்குழு மேடையிலேயே, ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும். அதில், ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்டது. இனி ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக தொடர்வார் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சி.வி.சண்முகம் அறிவித்தார். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டார்.
மீண்டும் நாடிய ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று திரண்டுள்ளதால் அடுத்தகட்ட திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தக்கூடாது என நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் தற்போது ஜூலை 11ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவுக்கும் தடை பெற நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடியுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், அதிமுகவில் தனக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஓபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய கூட்டம்
இதற்கிடையே ஓபிஎஸ்ஸின் எதிர்ப்பை மீறி ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்துவது குறித்தும், அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் நேற்று தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழை அனுப்புவது குறித்து, சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
ஒருபக்கம் ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு நடத்த தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஜூலை 11ஆம் தேது பொதுக்குழுவை எங்கு நடத்துவது, என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் தேதி கிடைக்கவில்லை என்பதால், மாநகருக்கு வெளியே தோதான இடத்தை தேர்ந்தெடுப்பது குறித்து ஈபிஎஸ் தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர்.
இடம் தேர்வு செய்ய
சென்னையில் திருமண மண்டபங்கள் கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு கல்லூரி ஆடிட்டோரியம் ஒன்றில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என்றும் பேசப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரி வளாகங்களில் கூட்டம் நடத்த உயர்கல்வித்துறையின் அனுமதி வேண்டும் என்பதால் அது இந்த நேரத்தில் சிக்கலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் விஜிபி ரிசார்ட் உள்ளிட்ட பல இடங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் சென்று பொதுக்குழு நடத்துவதற்குச் சரியாக வருமா பார்வையிட்டுள்ளனர்.
Recommended Video
இன்றும் ஆலோசனை
இதுவரை பொதுக்குழு நடத்துவதற்கான இடம் இறுதி செய்யப்படாததால் இன்று மீண்டும் அதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இன்றைய ஆலோசனையில் பொதுக்குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்து, பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது, என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.