திமுகவினர் எஸ்.பி.யை மிரட்டுறாங்க..அரசு வேடிக்கை பார்க்கிறது.. ட்விட்டரில் எடப்பாடி பழனிசாமி காட்டம்
சென்னை : தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் திமுகவினர் காவல் துறையினரிடம் நடந்துகொள்ளும் போக்கு வேதனைக்குரியது எனவும், புதுக்கோட்டையில் மாவட்ட கண்காணிப்பாளரை மிரட்டுகிறார்கள் அவரும் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறார் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் மறைமுக தேர்தலைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி திமுக, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதால் தடியடி நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுக, 6 இடங்களில் திமுக கூட்டணி மற்றும் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றார். இந்நிலையில், சுயேச்சையாக வெற்றி பெற்றவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் பரபரப்பு
இந்நிலையில், அன்னவாசல் பேரூராட்சியில் மார்ச் 2-ம் தேதி பதிவியேற்பு விழா நடைபெற்றது. முற்பகலில் திமுகவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேரும் பதவியேற்றனர். பிற்பகலில் விராலிமலையில் இருந்து சுமார் 35-க்கும் மேற்பட்ட கார்களில் அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒருவர் என மொத்தம் 9 பேரையும் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் ஊர்வலமாக அழைத்து வந்து பதவியேற்றனர்.

கவுன்சிலர்கள் பதவியேற்பு
இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து, காலை 7 மணிக்கெல்லாம் அதிமுகவைச் சேர்ந்த 9 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். திமுகவைச் சேர்ந்த ஒருசில கவுன்சிலர்களும் உள்ளே சென்றனர்.

சாலை மறியல் போராட்டம்
அப்போது இரு கட்சிகளைச் சேர்ந்தோரும் அராஜகத்தில் ஈடுபடுவதாக ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பேரூராட்சி அலுவலக வாசலில் வைக்கப்பட்ட பேரிகார்டுகளைக் கடந்து திமுகவினர் அலுவலகத்துக்குள் செல்ல திமுகவினர் முயற்சித்தனர். இதனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அப்போது திமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் திமுகவினர் காவல் துறையினரிடம் நடந்துகொள்ளும் போக்கு வேதனைக்குரியது, புதுக்கோட்டையில் மாவட்ட கண்காணிப்பாளரை மிரட்டுகிறார்கள்,அவரும் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறார்,மதுரையில் பெண்காவலர் முன்னிலையில் வேட்டியை அவிழ்த்து அடாவடி செய்கிறார்கள்"

வேதனை அளிக்கிறது
'வாய்மையே வெல்லும்'எனும் மந்திரத்தையும்,சிங்கத்தின் உருவத்தையும் தனது முத்திரையாக கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறையின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கண்ணியமிக்க காவல் பணியில் இருப்பவர்களை இப்படித் தரக்குறைவாக பேசுவதை இந்த அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications