அதிமுக பொதுக்குழு வழக்கில் வெற்றி.. முளைத்த எடப்பாடி கட்-அவுட், குளிர குளிர பாலாபிஷேகம்.. ஆரவாரம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வந்தவுடன் எடப்பாடி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சென்னை: இன்று அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்துள்ள நிலையில், எடப்பாடி ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்று கோஷம் அதிகரித்த போது இந்த பொதுக்குழு நடைபெற்றது. இதன் காரணமாக இந்த பொதுக்குழு மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

அதிமுக பொதுக்குழு
ஓபிஎஸ் ஒற்றை தலைமை என்பதில் உடன்படவில்லை. ஓபிஎஸ் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில், அவர் இல்லாமலேயே இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தான், அதிமுக விதிகள் திருத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் பொருளாளர் பதவி உள்பட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வழக்கு
இருப்பினும், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் தான் இருக்கும் நிலையில், தனது அனுமதியில்லாமல் இந்தப் பொதுக்குழு நடந்ததாகவும் எனவே இது செல்லாது என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு
இதை எதிர்த்து ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது. பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டம்
இதன் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயபுரத்தில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலாபிஷேகம்
தீர்ப்பு வருவதற்கு முன்னர், இன்று காலை முதலே அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் ஒன்றுகூடி வந்தனர். தங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும் என்பதை எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்கள் எடப்பாடிக்குத் தனியாக கட்அவுட்டை கையோடு எடுத்துவந்தனர். எதிர்பார்த்தபடி தீர்ப்பு வந்ததும் பட்டாசு வெடித்து நீதிமன்ற தீர்ப்பைக் கொண்டாடினர். மேலும், எடப்பாடி பழனிசாமி கட்அவுட்டிற்கு பால் அபிஷேகமும் செய்தார்.












Click it and Unblock the Notifications