தீர்ப்பால் ஓபிஎஸ் நிம்மதி பெருமூச்சு விட முடியாது.. அடுத்து அப்பீல்தான்.. எடப்பாடி தரப்பு பரபர ரெடி!
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Recommended Video
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரியும் ஓ பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சியின் சட்ட திட்டங்களுக்குள்பட்டு பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தார்.
அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது- ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலை நீடிக்கும்-ஹைகோர்ட் அதிரடி
ஓபிஎஸ் வழக்கு
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றமே இரு வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டது.
நீதிபதி ஜெயச்சந்திரன்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ் , வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதையே தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை
அதன்படி அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.
ஓபிஎஸ் ஆதரவாக வந்த தீர்ப்பு
அதில் அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் என்ன நிலை இருந்ததோ அதே நிலை நீடிக்கும். அதிமுகவில் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்பதும் தீர்ப்பும் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேல்முறையீடு?
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சென்னையில் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்படி மேல்முறையீடு செய்யப்பட்டால், யாருக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் என்பதும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்து என்ன நடவடிக்கையில் ஈடுபடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.