போதை பொருள் புழக்கம்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் போதை பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15ஆம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ வேதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ 2000 கோடியாகும். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். அவரை திமுக தலைமை, கட்சியிலிருந்து உடனடியாக நிரந்தரமாக நீக்கியது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவர் ஜெய்ப்பூர் பங்களாவில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு போதை பொருள் தடுப்பு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரிய வருகிறது.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று இருவரும் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து புகார் மனுவை அளித்தார்.












Click it and Unblock the Notifications