பாஜக அல்லாத கூட்டணிக்கு எடப்பாடி முயற்சித்தார்.. கட்சிக்குள் ஆதரவு இல்லை.. திருமாவளவன் ஓபன் டாக்!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக அல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக கூறிய திருமாவளவன், அந்த முயற்சிக்கு அதிமுகவின் முன்னணி தலைவர்களே ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2026ல் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக பிரிந்த நிலையில், அதன்பின் மீண்டும் பாஜக உடன் எந்த காரணத்தை கொண்டும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று அதிமுக கூறி வந்தது. ஆனால் அடுத்த ஓராண்டிற்குள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

திருமாவளவன் பேட்டி
அதிலும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்த தேர்தல்களில் அதிமுக ஒவ்வொரு முறையும் தோல்வியையே தழுவி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், அதிமுக மீது பாஜக சவாரி செய்து வருகிறது.
பாஜகவின் திட்டம்
அதிமுக மூலமாக தமிழ்நாட்டில் பாஜக தன்னை முக்கிய அரசியல் சக்தியாக நிலை நிறுத்தி கொள்ள முயற்சித்து வருகிறது. பாஜகவின் கொள்கைகள் மூலமாக தமிழ்நாட்டில் வேரூன்ற முடியவில்லை. எனவே 2 திராவிட கட்சிகளில் ஒரு கட்சியை தோழமை சக்தி என்ற பெயரில் அரவணைத்து, அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் உண்மையான செயல்திட்டம்.
இபிஎஸ் முடிவு
அந்த சதி வலையில் அதிமுக சிக்கிக் கொண்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார். அதில் உறுதியாகவும் இருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக அல்லாத கூட்டணியை அமைத்து திமுகவை வெல்ல வேண்டும் என்று விரும்பினார்.
அதிமுக தலைவர்கள்
ஆனால் அவருடன் உள்ள முன்னணி தலைவர்களே ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவர் எடுத்த முயற்சிகளுக்கும் ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது. பாஜக கொடுத்த நெருக்கடியின் விளைவாக அரைமனதுடன் தான் கூட்டணிக்கு அழைத்திருக்க முடியும் என்று கருதுகிறேன். பாஜக தனித்து நிற்க முடியாது. தனியாக நின்றால் அவர்கள் ஒரு சக்தியே இல்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்திவிடுவார்கள்.
இபிஎஸ்-க்கு உடன்பாடில்லை
ஆகவே அதிமுகவை கட்டுக்குள் வைத்து கொண்டு கூடுதல் இடங்களில் போட்டியிட்டு அதிமுக வாக்கு வங்கியை தங்களின் வாக்கு வங்கியாக காட்டுவதற்கு பாஜக இந்த உத்தியை கையாள்கிறது. இந்த கூட்டணியால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை. பாஜக அரசியல் சக்தியாக காட்டி கொள்வதற்கு இந்த களம் பயன்படும். இந்த கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்று கருதுகிறேன்.
ஒருங்கிணைந்த அதிமுக
அதேபோல் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் இணைப்பதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முயற்சி மேற்கொண்டதாக தகவல் வந்தது. அதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை. அதனால் பாஜக, உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் தான் கூட்டணி வைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications