அண்ணாமலைக்கு ஒருமுறை கூட பதில் சொல்லாத எடப்பாடி, ஸ்டாலின், உதயநிதி.. கவனிச்சீங்களா?
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒருமுறை கூட அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறியது இல்லை.. அவர் மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலினும் அண்ணாமலைக்கு ஒருமுறை கூட பதில் கூறியது இல்லை. ஏன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுமே இதுவரை அண்ணாமலை பற்றிய எந்த கேள்விக்கும் பதில் அளித்தது இல்லை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பாஜக உடன் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், " தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜகவிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக உடன் அதிமுக கூட்டணியை முறித்தது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை கூட அண்ணாமலை முன்னின்று நடத்திய எந்த பெரிய பிரச்சனைக்கும் உடனே ஆதரவு தெரிவித்தது இல்லை. ஏன் அண்ணாமலையின் கேள்விகளுக்கோ, விமர்சனங்களுக்கோ ஒருமுறை கூட பதில் அளித்தது இல்லை.
அண்ணாமலை தன்னை பெரிய தலைவராக முன்னிறுத்த விரும்புவதாக கருதிய எடப்பாடி பழனிசாமி, அவரை முன்னிறுத்தும் எந்த விஷயத்திற்கும் ஆதரவு தெரிவித்தது இல்லை. ஏன் அவர் பற்றி எந்த கேள்விக்கும் செய்தியாளர்களுக்கு ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தது இல்லை. தன்னுடைய கட்சியின் மற்ற தலைவர்களை வைத்தே எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இப்படி என்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒருமுறை கூட அண்ணாமலையின் பெயரை கூட உச்சரிக்க மறுத்துவிட்டார். எந்த செய்தியாளர் சந்திப்பிலும் அண்ணாமலை பற்றி பேசியதே இல்லை.. பாஜக என்ற தொனியில் தான் பேசுவார். பதில் அளிப்பார்.இப்படித்தான் கையாண்டு வருகிறார். அண்ணாமலை பற்றி எந்த கேள்விக்கும் பதிலும் அளிப்பது இல்லை.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பலமுறை அண்ணாமலை பற்றி கேள்விகளை தவிர்த்தே வந்தார். அண்ணாமலைக்கு எல்லாம் பதில் அளிக்க நான் விரும்பவில்லை என்று நேரடியாக உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதேநேரம் அதிமுகவின் எந்த தலைவர்கள் குறித்த கேள்விக்கும் பதிலும் அளிப்பார், பேசுவார்.
அண்மையில் சனாதனம் குறித்த கேள்விக்கு கூட அண்ணாமலையின் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆக மொத்தம் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மூவருமே பதில் அளித்தது இல்லை என்பதே எதார்த்தம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications