கோடை காலத்தில் மின் வெட்டு வேற.. வணிக மின் கட்டணத்தை உயர்த்துவதா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சென்னை: வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு மேலும் கட்டண சுமையை ஏற்றி துரோகம் செய்ய வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக பரவாலக செய்திகள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த தமிழக அரசு, வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும் என்று தெரிவித்து இருந்தது.

வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு மேலும் மேலும் கட்டண சுமையை ஏற்றி துரோகம் செய்ய வேண்டாம். மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கி தமிழக மின்சார வாரியத்திற்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தாமல் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வெளியில் அதிக விலைக்கு வாங்குவது ஏன்?
சிறு குறு பெரிய ஆலைகள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் மிகுந்த சிரம்பட்டு வரும் நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டணம் உயர்த்தப்படும் போதெல்லாம் மத்திய அரசையும் பிற மாநில அரசையும் திமுக அரசு துணைக்கு அழைக்கிறது. கோடை காலத்தில் மின்வெட்டால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மின் வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிடுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications