"பெட்ரோல், டீசல், கேஸ் விலை".. மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: வளைகுடா போர் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக வரி குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளும் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications