கொடநாடு வழக்கில் என்னை கைது செய்ய போறாங்க.. இப்படி சொன்னாரா எடப்பாடி பழனிசாமி? அதிமுகவில் 'பரபர'
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தம்மை கைது செய்ய வாய்ப்புள்ளது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார் என்பதுதான் அக்கட்சியினரிடையேயான ஹாட் டாபிக்காக ஓடுகிறது.
சென்னையில் திடீரென அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா மீதான குட்கா வழக்கில் குற்றவியல் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார் ஆளுநர். அதேபோல முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணைக்கு அனுமதி கோரும் கோப்பை பரிசீலனை செய்து வருகிறார் ஆளுநர். உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மாளிகை தாக்கல் செய்த அறிக்கையில்தான் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதுநாள் வரை திமுக பக்கம் பாய்ந்த நடவடிக்கைகள், பாஜகவுடனான கூட்டணியை முறித்து அதிமுக பக்கம் திரும்புகிறது என்பதற்கான சமிக்ஞைதான் இது எனவும் கூறப்பட்டு வந்தது. இந்த பின்னணியில்தான் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கைது நடவடிக்கைகள் வரப் போகிறது.. கவனமாகவும் எதிர்கொள்வோம் என கூறியதாக நேற்று நாமும் செய்திகளைப் பதிவு செய்திருந்தோம். தற்போது, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தம்மை எந்த நேரத்திலும் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. என்னையே கைது செய்து சிறையில் அடைக்கும் போது நீங்களும் கவனமாக இருங்கள். எத்தனை பேர் வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டுசிறைக்கு போகக் கூடும் என்றெல்லாம் விரக்தியான மனநிலையில் பேசினாராம். இதை பகிரங்கப்படுத்திவிட வேண்டாம் என சொல்லியும் கூட பாஜகவுக்கு நெருக்கமான சில மாஜிக்கள் இந்த தகவலை உடனே டெல்லிக்கும் பாஸ் செய்ய அப்படியே ஊடகங்களிலும் கசியத் தொடங்கிவிட்டது.
ஆனால் கடந்த காலங்களைப் போல, யார் தகவலை கசியவிடுவது? என்றெல்லாம் இப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு விசாரித்து கடுப்பாகவில்லையாம். ஏனெனில் கசியவிடும் 'ஏக்நாத் ஷிண்டே' இன்னார்தான் என தெரிந்தும் 'காட்டமான' நடவடிக்கை பாய்ந்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் 'கடந்து செல்கிறாராம்' எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைவர்களிடையேயான இப்போதைய உரையாடலே எடப்பாடி பழனிசாமி கைதாவார் என பேசியதில் இருந்துதான் தொடங்கவே செய்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications