வேளாண் பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை.. ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி! லிஸ்ட் போட்டு விமர்சனம்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால் இந்த பட்ஜெட்டினால் எந்த பிரயோஜனமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
லோக்சாப தேர்தல் நெருங்கி வருவதால் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பெய்த கனமழை, விளை நிலங்களை கடுமையாக பாதித்தது. அதேபோல கரும்பு ஆலைகளின் இயக்கம் அதிமுக ஆட்சியில் தொடங்கி தற்போது விலை சீரடையவில்லை. எனவே இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டன. இந்நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்களை தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், “வேளாண் பட்ஜெட்டினால் எந்த பிரயோஜனமும் இல்லை. கரும்பு டன்னுக்கு ரூ.4000 தருவதாக சொன்னார்கள் தரவில்லை. விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்துள்ளனர். நெல், கரும்பு குறித்து தி.மு.க. வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தி.மு.க. ஆட்சியில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் குறுவை சாகுபடி சேர்க்கப்படவில்லை. குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனையளிக்கிறது. குறுவை சாகுபடி விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக இயக்க நடவடிக்கை தேவை. நீரின்றி காய்ந்த சம்பா, தாளடி சாகுபடி பயிரால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான விளைநிலங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு முறையாக பெறாத காரணத்தால் டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications