தவெக-வில் செஞ்சி ராமச்சந்திரன் இணைவது உண்மையா? எடப்பாடி பழனிசாமி கூறிய தகவல்!
சென்னை: அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தியை கிளப்புகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், முதல் மாநில மாநாட்டுக்குத் தமிழக காவல்துறையும் அனுமதி கொடுத்துள்ளது. இதனால், த.வெ.க தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான வேலைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், தவெக கட்சியில் சேருமாறு, அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அணுகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தற்போது போதிய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதால், விஜய் கட்சியின் கோரிக்கையை ஏற்று அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் எனக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் செஞ்சி ராமச்சந்திரன் இணைந்தால் அவருக்குக் கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், "அதிமுக ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த இயக்கம். பொன்விழாக் கண்ட இயக்கம் அதிமுக. அதனால், வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தியை கிளப்புகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications