அது இனி அவ்ளோதான்.. முடிச்சு விட்டாச்சு போங்க.. இனி சாத்தியமில்லை! எடப்பாடி பளிச்
சென்னை: அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்களே என்றும், மீண்டும் அவர்களை இணைக்க வாய்ப்பில்லை எனவும் தெளிவுபட கூறியுள்ளார்.
அடித்த மழையில், சென்னையில் நீர் ஏறிச்சோ இல்லையோ, திமுகவின் ஸ்கோர் மட்டும் சர்ருனு ஏறிடுச்சு. மழை சுமாராக இருந்ததால், ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெரிய அளவில் திமுகவுக்கு கைகொடுத்து. தவிர, எந்த பக்கம் பார்த்தாலும், களத்தில் நின்று உதயநிதி ஆய்வுகளை செய்ய, கட்சிக்கு பயங்கர பாராட்டு மழை. இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் குறைகளை சுற்றி காட்டி, எதிர்க்கட்சிகளின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டிய அதிமுக.. கடந்த சில நாட்களாகவே சைலன்ட் மோடில் இருந்தது.

இதற்கு காரணம், கட்சிக்குள் நிலவும் பூசல்கள்தான். அதாவது, கட்சியின் இணைப்பை மாஜி மந்திரிகள் 6 பேர் வலியுறுத்தியதாக செய்திகள் பறந்தன. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்திருந்தாலும், தங்களுக்கு இருக்கும் வாக்குவங்கியை தக்க வைத்துக்கொண்டு வலுவான எதிர்க்கட்சியாக வலம் வர வேண்டிய அதிமுக, முதலில் சறுக்கியது ஈரோடு இடைத்தேர்தலில்தான். கொங்கு பகுதியிலேயே வெற்றி பெற முடியாதது எடப்பாடி பழனிசாமியை தலைமையை கேள்விக்கு உள்ளாக்கியது.
அதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட்தான் எல்லோருக்குமே தெரியுமே! கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதாக எடப்பாடி சொல்லிக்கொண்டாலும், பல இடங்களில் இரண்டாவது இடத்தில் பாஜகதான் இருந்தது. எனவே, பிரதான எதிர்க்கட்சி யார் என்கிற கேள்வி எழுந்தது. தவிர, 12 மணி நேர வேலை அறிவிப்பு, உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியது, சாம்சங் போராட்டம் போன்ற பஞ்சாயத்துகளில் எதிர்கட்சியாக இருந்து அரசியல் செய்து கட்சியின் மைலேஜை உயர்த்த வேண்டிய இபிஎஸ், பெயரளவுக்கு மட்டுமே இதை செய்ததாக உட்கட்சி நிர்வாகிகளே புலம்பினர்.
இப்படி இருக்கையில்தான் சென்னை மழை வந்தது. இதிலும் இபிஎஸ்ஸின் அரசியல் எதுவும் பேசுபொருளாகவில்லை. இப்படியே போனால் கட்சி காணாமல் போய்விடும் என்று பயந்த மாஜி மந்திரிகள் 6 பேர், "அவங்களை மீண்டும் இணைச்சிக்கலாம். அப்படித்தான் கட்சியை காப்பாற்ற முடியும்" என இபிஎஸ் இடம் பேசியுள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து இன்றைய பிரஸ் மீட்டில் சந்திப்பில், செய்தியாளர்கள் கேள்வியை எழுப்ப.. அவரோ மிக உறுதியாக இணைப்பு சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்.
மேலும் இபிஎஸ் பேசியதாவது, "முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் இணைப்பை வலியுறுத்துவதாக கூறுவது பச்சை பொய். அதிமுக பிரிந்து இருக்கவில்லை, எங்கள் தரப்பில் இருப்பதுதான் உண்மையான அதிமுக. அதிமுக ஒருங்கிணைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்களே.. மீண்டும் இணைக்க வாய்ப்பில்லை. நீக்கப்பட்டவர்கள் பல்வேறு அவதாரங்களை எடுக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
இது அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளும் தரப்பினருக்கு அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இணைப்பை சாத்தியப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications