திமுக காற்றில் ஊழல் செய்தது.. விஜய் பட வசனத்தை சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அடுத்து நடந்த சம்பவம்!
பெரம்பலூர்: காற்றிலேயே ஊழல் செய்த கட்சி திமுக என்று விஜயின் கத்தி பட வசனத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். விவசாயியான எனக்கு பாஜகவை கண்டு பயமில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, 1999ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்த போது திமுகவுக்கு மதவாதக் கட்சியாக தெரியவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொண்டார். குன்னம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஸ்டாலின், உதயநிதி இருவரும் எங்கு பார்த்தாலும் 2026 தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றிபெறும் என்று பொய்யான செய்தியைச் சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
குன்னம் தொகுதிக்கு வந்து எழுச்சியைப் பாருங்கள், இந்த எழுச்சியே வெற்றியைக் காட்டும். 200 இடங்கள் என்று திமுக கனவு காணலாம், ஆனால் அதிமுக 210 இடங்களில் வெல்லும். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 50 மாத காலம் ஓடிவிட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு ஏதாவது திட்டம் கொடுத்திருக்கிறாங்களா? இத்தொகுதியில் அமைச்சர் வேறு இருக்கிறார்.
30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை
தந்திரமாக மக்களை ஏமாற்றி ஆட்சி செய்கிறது திமுக. மகளிர் உரிமை தொகை ரூ.1000 கொடுப்பதாக சொல்கிறார். அது மக்களின் வரிப்பணம், திமுகவின் பணம் இல்லை. அதுவும் 28 மாதங்கள் கழித்து அதிமுக பல முறை கேட்டபின் தான் கொடுக்க முன்வந்தார்கள். இப்போது மீண்டும் விடுபட்டவர்கள் 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாக சொல்கிறார்.
தேர்தல் ஸ்டண்ட்
அதுவும் மக்கள் மீது பரிதாபப்பட்டு கொடுக்கவில்லை. தேர்தல் வருகிறது, மக்களின் வாக்குகள் தேவை. அதுதான் காரணம். ஆக, மக்களுக்காக இல்லை, ஓட்டுக்காகவே கொடுக்கும் முதல்வர் ஸ்டலின் மகளிர் உரிமைத் தொகையை கொடுக்கிறார். 2021 தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 கொடுப்பதாகச் சொன்னோம். ஆனால், திமுக பொய்யைப் பேசி ஆட்சிக்கு வந்துவிட்டது.
காற்றில் ஊழல் செய்த கட்சி
காற்றை கண்ணால் பார்க்க முடியுமா? இந்த மாவட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் கண்ணில் பார்க்க முடியாத காற்றிலும் ஊழல் செய்தவர். இவர்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்ததால் மக்கள் துன்பத்தில் உள்ளனர். திமுக திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்திருக்கின்றனர். தினமும் பேட்டி கொடுக்கணுமாம். இதற்கு என்று துறை இருக்கிறது.
மக்கள் செல்வாக்கு இல்லை
அவர்கள் தான் வெளியிடணும். மக்கள் செல்வாக்கு இழந்தததால், மக்களை குழப்பி மீண்டும் ஆட்சிக்கு வர கூடுதல் தலைமைச் செயலாளரை நியமித்திருக்கிறார்கள். ஐஏஎஸ் அமுதா, 1 கோடியே 5 லட்சம் பேருக்கும் மனு வாங்கி, 1 கோடியே 1 லட்சம் பேசுக்கு தீர்வு காணப்பட்டது என்று கூறுகிறார். இது உண்மை என்றால் முழு விளக்கம் கொடுக்க வேண்டும்.
அமித்ஷாவை சந்திக்க கூடாதா?
இல்லையென்றால் அதிமுக ஆட்சி வந்ததும் பொய் சொன்னதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நான் கள்ளத்தனமாக அமித்ஷாவை சந்தித்தேன் என்கிறார் உதயநிதி. இந்திய உள்துறை அமைச்சரை பார்க்கக்கூடாதா? நான் டெல்லி போனபோது தமிழ்நாட்டு பிரச்னையை பேசுங்கன்னு உங்க அப்பா ஸ்டாலின் சொன்னார்.
சாதிவாரி கணக்கெடுப்பு
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மத்திய அரசுக்கு பிரச்னையைக் கொண்டுசென்று நிவாரணம் பெற்றுக்கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பணி தொடங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை கைவிட்டுவிட்டனர். அதில் எனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்டாலின் பொய் சொல்கிறார். நான் முதல்வராக இருக்கும்போது எனக்கு அதிகாரம் இருந்தது உங்களுக்கு ஏன் இல்லை?
ஓரணியில் தமிழ்நாடு
ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டம் கொண்டு வந்துள்ளார். வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள். பிச்சை எடுக்கும் அளவுக்கு திமுகவை கொண்டுவந்துட்டார்கள் அப்பாவும், மகனும். யாரும் உறுப்பினராக சேரவில்லை என்றால் உரிமை தொகை நிறுத்துவிடுவார்களாம். அதிமுக வந்ததும் நிறுத்தப்பட்ட காலத்துக்கும் சேர்த்து கொடுக்கப்படும்.
எனக்கு பயமா?
பாஜகவை கண்டு இபிஎஸ் பயப்படுகிறார் என்கிறார். பயம் என்ற சொல்லே எனக்குத் தெரியாது. இது மம்பட்டி புடிச்ச கை, நான் விவசாயி. ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல, மக்கள் தான் முக்கியம். மக்களுக்காக எந்த தியாகமும் செய்வோம். 2 கோடி தொண்டனும் செய்வான். நான் முதல்வராக இருந்தபோது மோடி சென்னை வந்தபோது கருப்பு பலூன் விட்டார் ஸ்டாலின்.
மோடிக்கு சிவப்பு கம்பளம்
இப்போது மோடியை ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கிறார். சென்னைக்கு அழைத்து கலைவாணர் அரங்கில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்துகிறார்கள். அப்போது பிரதமர் நல்லவர்.. கேலோ இந்தியா போட்டியை உதயநிதி நடத்துறார், செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு அழைத்து வந்தனர். அப்போதெல்லாம் மோடி நல்லவர், இப்ப மட்டும் கெட்டவரா?
மதவாத கட்சியா பாஜக?
திமுக 1999ல் பாஜகவோடு கூட்டணி போட்டு மத்திய அமைச்சராக இருந்தார்கள். அப்போதெல்லாம் பாஜக மதவாதக் கட்சியாகத் தெரியவில்லை. அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் மதவாதக் கட்சியா? கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. எதிரிகளை வீழ்த்த பாஜக வந்திருக்கு, இன்னும் பல கட்சிகள் வரும். 2026ல் அதிக வாக்குகளைப்பெற்று அதிமுக பெரும்பான்மையுடன் தனியாக ஆட்சி அமைக்கும்.
குடும்பத்துடன் இருந்த ஸ்டாலின்
உங்களுடன் ஸ்டாலின் திட்டங்களை நோட்டீஸில் அடிச்சிருக்கார். நான்கு வருடம் கழித்து அவருக்கு மக்கள் ஞாபகம் வருகிறது. இத்தனை நாள் குடும்பத்துடன் ஸ்டாலினாக இருந்தவர், இப்போது வீடுவீடாக நோட்டீஸ் கொடுத்து, உடனே தீர்வு கொடுப்பாராம். நான் முதல்வராக இருக்கும்போது ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பெட்டிக்குள் மனுவை போட சொன்னார்கள்.
மணல் கொள்ளை
ஆட்சி அமைந்ததும் மனுக்களை திறந்து பார்த்து நிவர்த்தி செய்யப்படும் என்றனர். ஏற்கனவே குறைகளை மக்கள் கொடுத்துட்டாங்க.. அப்புறம் எதுக்கு இது? மணல் கொள்ளை, கனிம வளம் கொள்ளை அதிகமாகிவிட்டது. கரூர் மாவட்டம், மனமங்கலம் தாலுகாவில் வாங்கல் என்ற இடத்தில் மணல் கொள்ளையைத் தடுத்தவர் வெட்டப்பட்டு இறந்தார். எப்படிப்பட்ட அவல நிலை இது?
சட்டம் ஒழுங்கு
இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து வெட்டுக்குத்து அதிகம். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று டெல்லியில் விருது வாங்கினேன். அப்படிப்பட்ட மாநிலம் இப்போது அமைதி இழந்துவிட்டது. இதுவரை திமுக ஆட்சியில் 7,737 கொலைகள் நடந்திருக்கிறது. தமிழ்நாடு கொலை மாநிலம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications