எடப்பாடி போட்ட உத்தரவு.. கச்சிதமாக முடித்த அதிமுக நிர்வாகிகள்.. 11 ஆயிரம் விருப்ப மனு விநியோகமாம்!
சென்னை: அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த சூழலில், 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மொத்தமாக சுமார் 11 ஆயிரம் பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலை விடவும் சுமார் 3 ஆயிரம் விருப்ப மனுக்கள் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக தரப்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கப்பட்டது. அந்த மனுவில் மொத்தமாக 25 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

பொது தொகுதி மற்றும் தனித் தொகுதி ஆகிய இரண்டுக்கும் விருப்ப மனுக்கள் விலையாக ரூ.15 ஆயிரம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களுக்கு ரூ.5 ஆயிரம் விலையாக பெறப்பட்டன. விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 1,237 பேர் அதனை பெற்று, பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர்.
அதில் எடப்பாடி பழனிசாமி பெயரில் மட்டும் 349 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. டிசம்பர் 23ஆம் தேதியுடன் விருப்ப மனு விநியோகம் முடிவடைந்த நிலையில், சுமார் 9 ஆயிரம் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் விருப்ப மனுக்கள் அதிகமாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் விருப்ப மனுக்கள் விநியோகத்தை மேலும் 3 நாட்கள் நடக்கும் என்று டிசம்பர் 28 முதல் டிசம்பர் 31 வரை கால அவகாசத்தை நீட்டித்தார். கடந்த 3 நாட்களாக விருப்ப மனுக்கள் அதிகமாக பெறப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நேற்றுடன் இந்த கால அவகாசம் முடிவடைந்த சூழலில், மொத்தமாக சுமார் 11 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக அதிமுகவினர் உற்சாகமாக சொல்கின்றனர்.
2021 சட்டசபைத் தேர்தலின் போது சுமார் 8 ஆயிரம் பேர் விருப்ப மனுக்கள் பெற்று தாக்கல் செய்த நிலையில், தற்போது 11 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தனது பிரச்சார பயணத்தின் போதே வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications