திமுக vs அதிமுக.. இருமுனைப் போட்டி.. 3வது அணி தாக்கத்தை ஏற்படுத்தாது.. விஜயை சாடிய திருமாவளவன்!
சென்னை: விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பை விடுத்து திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவை எதிர்ப்பவர்கள் சிதறி கிடப்பதாகக் கூறிய திருமாவளவன், இந்த தேர்தல் இருமுனைப் போட்டிதான் என்றும், 3வது அணி தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறி இருக்கிறார்.
கடந்த 2 நாட்களாக திமுக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் கம்யூனிஸ்ட்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை திமுக கூட்டணி கட்சிகள் நிராகரித்துள்ளனர். இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.

இதன்பின் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், தமிழுக்காக தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கும் பார்வை கொண்டவர் கமல்ஹாசன். மதச்சார்பின்மையைக் காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாகவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து இயங்குகிறார். சென்னையில் ஆகஸ்ட் 16ல் நடக்கவுள்ளது என் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன்.
வரும் சட்டமன்றத் தேர்தல் மிகக் கடினமாக இருக்கும் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாகவும், வலுவாகவும் இருக்கிறது. திமுகவை எதிர்க்கும் கட்சிகள் இன்னும் கூட்டணி வடிவத்தைக் கூட முழுமையாகப் பெறவில்லை. சில கட்சிகள் கூட்டணியில் சேராமல், கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடாமல் இருக்கிறார்கள்.
இதனால் திமுகவை எதிர்ப்பவர்கள் சிதறி கிடக்கிறார்கள். ஆனால் திமுக கூட்டணி ஓரணியில் இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பு என்பது, திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உருவாக்குவதற்காகத் தான். எங்களுக்கு அதிமுக ஆட்சியிலும் நெருக்கடி இருந்தது. நெருக்கடியை சந்தித்துத்தான் கட்சிகள் வளர முடியும்.
எங்களின் நெருக்கடியைப் பொதுவெளியில் சொல்வதால், அவமானப்படுகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அதேபோல் திமுக கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிடுவீர்களா என்பது யூகமான கேள்வி. யூகமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. விசிகவும் இணைந்து உருவாக்கிய கூட்டணியை வலுப்பெற செய்வதும், வெற்றி பெற வைப்பதும் எங்களின் பொறுப்பாகும்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கும். இந்த தேர்தல் நிச்சயமாக இருமுனை போட்டிதான். தேசிய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி.. 3வது அணி தாக்கத்தை ஏற்படுத்தியதாக வரலாறு இல்லை. மக்களும் அப்படியான மனநிலையில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார். அதிமுக மட்டுமல்லாமல் தவெக உடனான கூட்டணி வாய்ப்பையும் திருமாவளவன் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications