முக்குலத்தோர் வாக்கு.. டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க ஒப்புக்கொண்ட எடப்பாடி.. 2 முக்கிய காரணம்!
சென்னை: அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதன் மூலமாக அதிமுக கூட்டணிக்குள் டிடிவி தினகரனை கொண்டு வர எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை மாதத்தில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். அதற்கான காலம் கடந்துவிட்டது.

ஆனால் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இதே பதிலை டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பிய பின் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது என்றார். ஆனால் டிடிவி தினகரன் பற்றி கேள்விக்கு, கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்று கூறினார்.
இதன் மூலமாக என்டிஏ கூட்டணிக்குள் டிடிவி தினகரனின் அமமுக கொண்டு வரப்படலாம் என்று சூசகமாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அமமுகவை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் அமைந்துள்ளது. அதாவது டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்கவில்லை என்றால், அவர் விஜய்யுடன் களமிறங்குவதற்கு தயாராகிவிட்டார்.
விஜய்யுடன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்தால், அது தென் மாவட்டங்களிலும் அதிமுகவுக்கு மீண்டும் பின்னடைவை உருவாக்கும். ஏற்கனவே லோக்சபா தேர்தலில் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பாஜகவுடன் அமமுக கட்சியையும் இணைத்து தேர்தலில் போட்டியிட்டால், அதிமுகவுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.
அதேபோல் முக்குலத்தோர் சமூக மக்களின் முகமாக டிடிவி தினகரன் மற்றும் நயினார் நாகேந்திரனை முன்னிறுத்த முடியும். அதேபோல் 2021 சட்டசபைத் தேர்தலின் போது அமமுக 2.35% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தாலும், தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியை 20 தொகுதிகளில் தடுத்து நிறுத்தியது. சுமார் 24 தொகுதிகளில் அமமுக 3வது இடம்பிடித்தது.
இதனால் எடப்பாடி பழனிசாமி எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை என்று பார்க்கப்படுகிறது. இம்முறை விஜய்யுடன் கூட்டணி அமையாது என்பது உறுதியாகிவிட்டதால், டிடிவி தினகரனை தங்களின் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப டிடிவி தினகரனும் தேர்தலில் எதிரி, துரோகி என்று பார்க்க தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இத்தனை நாட்களாக எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று விமர்சித்து வந்த டிடிவி தினகரன், எப்படி அவரின் தலைமையின் கீழ் உள்ள கூட்டணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இணைந்தாலும், அதிமுகவினர் டிடிவி தினகரன் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்களா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications