சென்னையை விட்டு செல்லக்கூடாது.. அதிமுக புது எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி.. பின்னணி
சென்னை: சென்னையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அந்த கட்சியில் வெற்றி பெற்ற 47 எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர். இந்த சமயத்தில் ''அடுத்த சில நாட்களுக்கு யாரும் சென்னையை விட்டு செல்லக்கூடாது'' என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மொத்தம் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் பாஜக, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவில் 66 பேர் வெற்றி பெற்றனர். ஆனால், இந்த முறை அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 19 பேர் குறைந்து 47 ஆக சரிந்துள்ளது. இந்நிலையில் தான் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்கள் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர்.
இந்த வேளையில் எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி அடுத்த சில நாட்கள் சென்னையிலேயே இருக்க வேண்டும். வேறு எங்கேயும் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. இதனால் தவெக பெரும்பான்மை இன்றி தவிக்கிறது. இந்நிலையில் தான் தவெகவிற்கு ஆதரவு வழங்கலாமா? வேண்டாமா? என்பது அதிமுகவில் பேசும் பொருளாகி உள்ளது. ஒரு தரப்பினர் ஆதரவு வழங்க விரும்பும் நிலையில், இன்னொரு தரப்பினர் வேண்டாம் என்கின்றனர்.
இதனால் தமிழக அரசியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்புக்கு நடுவே தான் எடப்பாடி பழனிச்சாமி தனது எம்எல்ஏக்களை சென்னையை விட்டு செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இன்று எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவெகவின் நகர்வுகளை கருத்தில் கொண்டு இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே தான் தவெகவிற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. விஜய் கேட்டு கொண்டதால் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் கட்சி 5 எம்எல்ஏக்களுடன் தவெக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் தவெக பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் இன்னும் 5 எம்எல்ஏக்கள் பற்றாக்குறையாக உள்ளது.
இதனால் விஜய்யின் தவெக திமுக கூட்டணியில் தலா 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவை நாடி உள்ளது. இந்த 3 கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் தவெக மெஜாரிட்டியை எட்டும். தற்போது வரை இந்த கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவில்லை. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலில் உள்ளது. '












Click it and Unblock the Notifications