கொளத்தூரில் நேற்று பேசியதை இன்று சேப்பாக்கத்தில் முற்றிலும் மறுத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் குறித்து நேற்று கொளத்தூரில் பிரச்சாரம் செய்த போது, சர்ச்சை கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மட்டும் கொரோனா வந்திருந்தால் முக ஸ்டாலின் காணாமல் போயிருப்பார் என்று கூறியிருந்த நிலையில், மக்களுக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை, காணாமல் போய்விட்டார் என்று தான் சொன்னேன் என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
திமுக ஆட்சியில் மட்டும் கொரோனா வந்திருந்தால் முதல்வர் முக ஸ்டாலின் காணாமல் போயிருப்பார், அந்த கொரோனாவிலேயே போயிருப்பார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொளத்தூர் தொகுதி பிரச்சாரத்தில் கூறியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். இதுகுறித்து திமுகவை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து வருகின்றன.

திமுக தலைமையே இதனை கடுமையாக கண்டித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வட சென்னை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கலாநிதி வீரசாமி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது ஆர்.எஸ். பாரதி பேசுகையில், "அன்றைக்கு கொரோனா பரவல் இருந்த போது மருத்துவமனையிலே போய் பார்த்துவிட்டு வந்த நேரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பத்தினரே, அவருடைய துணைவியாரே கதறி அழுதிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்த நேரத்திலே உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுங்கள் என்று சொன்னபோது மிகுந்த வேதனையோடு ஒரு நினைவுபடுத்தினார். எங்களுடைய தந்தை கோவையிலே மருத்துவமனையிலே கொரோனா நோயாளிகளைப் பார்த்துவிட்டு வந்த நேரத்தில் அவருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சமும் பயமும் எங்களுக்கெல்லாம் ஏற்பட்டது. அது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று சொன்னார். திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் அத்தனை பேரும் கலங்கினோம்.
அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி எடப்பாடி பழனிசாமி இந்த இந்த அளவுக்குக் கேவலமாகப் பேசுகிறார் என்றால் இது ஒன்றும் புதிதல்ல. காரணம் அவருக்குக் கொலை, கொள்ளை இதெல்லாம் கைவந்த கலை. ஏற்கனவே அவர் தன்னுடைய பங்காளிகளை 1979லேயே மூன்று பேரைக் கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்துள்ளார். கொலைக் குற்றவாளியாக வழக்கு நடந்தது. அந்த வழக்கிலே இருந்து எப்படி வெளியே வந்தார் என்பது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அந்த பகுதியில் இருக்கிற மக்களுக்கும் தெரியும். அந்த வழக்கின் போது மட்டும் அன்றைக்கு அதிமுக ஆட்சியிலே இல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆயுள் கைதியாகத்தான் இருந்திருப்பார்" என்று ஆர்எஸ் பாரதி கடுமையாக பதிலடி கொடுத்தார்.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர் ஆதி ராஜராமை ஆதரித்து இன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஸ்டாலின் கொரோனாவில் போயிருக்கலாம் என தான் பேசவில்லை என மறுத்தார். நான் அப்படியெல்லாம் பேசவில்லை. முக ஸ்டாலின் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை, கொரோனா காலகட்டங்களில் மக்களுக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை, காணாமல் போய்விட்டார் என்று தான் சொன்னேன் என எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications