எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்! அடித்து சொன்ன தம்பிதுரை! அப்போ காத்து வாக்குல கேட்டது உண்மையா?
சென்னை: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார், சில ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது என அதிமுக மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் இழுபறிக்கு இடையே, அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தம்பிதுரை எம்பி ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் விருப்பம் அதிமுக ஆட்சி!
செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. மக்கள் எங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எங்களது அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
எதையும் இப்போது சொல்ல முடியாது!
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கணக்குகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், எதையும் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது. சில விஷயங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும்," என சூசகமாகப் பதிலளித்தார்.
மீண்டும் முதல்வராக ஈபிஎஸ்?
முக்கிய அறிவிப்பாக, "மீண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதிமுக தொண்டர்களும் மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்," என்று திட்டவட்டமாகக் கூறினார்.
பொறுத்திருந்து பாருங்கள்!
கூட்டணி மற்றும் ஆதரவு குறித்த கேள்விக்கு இறுதிவரை பிடிகொடுக்காமல் பேசிய அவர், "யார் ஆதரவு தருவார்கள், எப்படி ஆட்சி அமையும் என்பதை இப்போதே கேட்காதீர்கள். இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள், நல்ல செய்தி வரும்," என்று கூறி விடைபெற்றார்.
அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியை நடத்துவதாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்டாலினும் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக 47 இடங்களைப் பிடித்துள்ளது. இந்நிலையில், தம்பிதுரையின் இந்தப் பேட்டி, அதிமுக திரைமறைவில் தீவிரமாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications